9-வது திருமொழி - வெண்ணெய்விழுங்கி

--வெ.ராமன் 08:23, 15 பெப்ரவரி 2006 (UTC)

பாலக்ரீடை தொகு

  எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டுஅத னோசை கேட்கும்*
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*
புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை புரைபுரையால் இவை செய்ய வல்ல*
அண்ணற் கண்ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய். (1)
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ! வருக இங்கே*
கரியகுழல் செய்யவாய் முகத்துக் காகுத்த நம்பீ! வருக இங்கே*
அரியனிவன் எனக்கு இன்று நங்காய்! அஞ்சன வண்ணா! அசலகத்தார்*
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் பாவியேனு க்குஇங்கே போத ராயே.                (2)
திருவுடைப் பிள்ளை தான்தீய வாறு தேக்க மொன்று மிலன்தேசுடையன்*
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்*
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான்வழக்கோ? அசோதாய்!*
வருக வென்று உன்மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மதுசூதனனே.         (3)
கொண்டல் வண்ணா! இங்கே போதராயே கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே*
தெண்திரை சூழ்திருப்பேர்க் கிடந்த திருநாரணா! இங்கே போதராயே*
உண்டு வந்தேன் அம்மனென்று சொல்லி ஓடி அகம்புக ஆய்ச்சி தானும்*
கண்டெதிரே சென்றெடுத்துக் கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்விதானே.        (4)
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல்வளையாள் என்மகளிருப்ப*
மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்*
சாளக் கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்*
ஆலைக் கரும்பின் மொழியனைய அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய்.  (5)
போதர்கண்டாய் இங்கே போதர்கண்டாய்  போதரேனென்னாதே போதர் கண்டாய்*
ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேசநான் கேட்க மட்டேன்*
கோதுகல முடைக்குட்டனேயோ!குன்றெடுத்தாய்! குடமாடு கூத்தா!*
வேதப்பொருளே! என்வேங்கடவா! வித்தகனே! இங்கே போதராயே.      (6)
செந்நெலரிசி சிறுபருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்*
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்*
இன்ன முகப்பன் நானென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்*
உன்மகன் தன்னை யசோதை நங்காய்! கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே. (7)
கேசவனே! இங்கே போதராயே கில்லேனென்னாது இங்கே போதராயே*
நேசமிலாதாரகத் திருந்து நீவிளையாடாதே போதராயே*
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று*
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா! இங்கே போதராயே.  (8)
கன்னலி லட்டுவத்தோடு சீடை காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு*
என்னகமென்றுநான் வைத்துப் போந்தேன் இவன்புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்*
பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான்*
உன்மகன் தன்னை யசோதை நங்காய்! கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.  (9)
சொல்லி லரசிப் படுதி நங்காய்! சுழலுடையன் உன்பிள்ளை தானே*
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு*
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத் திக்கு அவ்வளை கொடுத்து*
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே.      (10)
வண்டு களித்திரைக்கும் பொழில்சூழ் வருபுனல் காவிரித் தென்னரங்கன்*
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான் விட்டுசித்தன் பாடல்*
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன்தன் அடியார்களாகி*
எண்திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என்தலை மேலனவே.      (11)
        பெரியாழ்வார் திருவடிகளே சரணம்