9-வது திருமொழி - வட்டுநடுவே

புறம்புல்கல் தொகு

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

வட்டு நடுவே வளர்கின்ற* மாணிக்க

மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்*

சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிங்க* என்

குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான். (1)


கிண்கிணி கட்டிக் கிறிகட்டி* கையினில்

கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி*

தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து*

என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான். (2)


கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்*

ஒத்தப் பொருத்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான்*

கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய*

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்களேறுஎன் புறம்புல்குவான். (3)


நாந்தக மேந்திய நம்பி சரணென்று*

தாழ்ந்த தனஞ்செயற் காகி* தரணியில்

வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்*

ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான். (4)


வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி*

கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்*

பண்பல பாடிப் பல்லாண்டிடைப்ப* பண்டு

மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமன் என்னைப் புறம்புல்குவான். (5)


சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்*

உத்தர வேதியில் நின்ற ஒருவனை*

கத்திரியர் காணக் காணிமுற்றும் கொண்ட*

பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந்தான்என் புறம்புல்குவான். (6)


பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி*

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்*

மொத்தத் திருவயி ராற விழுங்கிய*

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான். (7)


மூத்தவை காண முதுமணல் குன்றேறி*

கூத்து உவந்தாடிக் குழலால் இசைபாடி*

வாய்த்த மறையோர் வணங்க* இமையவர்

ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான். (8)


கற்பகக் காவு கருதிய காதலிக்கு*

இப்பொழுது ஈவனென்று இந்திரன் காவினில்*

நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்*

உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான். (9)


ஆய்ச்சியன் றாழிப் பிரான் புறம்புல்கிய*

வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து*

ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்*

வாய்த்த நன்மக்களைப் பெறறு மகிழ்வரே. (10)


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

"https://ta.wikibooks.org/w/index.php?title=9-வது_திருமொழி_-_வட்டுநடுவே&oldid=9355" இலிருந்து மீள்விக்கப்பட்டது