8-வது திருமொழி - பொன்னியற்கிண்கிணி


அச்சோப் பருவம் தொகு

கலித்தாழிசை

பொன்னியற் கிண்கிணி சுட்டிபுறம் கட்டி*

தன்னிய லோசை சலன்சல னென்றிட*

மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்*

என்னிடைக் கோட்டாரா அச்சோவச்சோ எம்பெருமான்!வாரா அச்சோவச்சோ. (1)


செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டேபோல்*

பங்கிகள் வந்து உன் பவள வாய்மொய்ப்ப*

சஙகுவில் வாள்தண்டு சக்கர மேந்திய*

அங்கைகளாலே வந்து அச்சோவச்சோ ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ. (2)


பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து*

நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கை புக்கு*

அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த*

அஞ்சண வண்ணனே!அச்சோவச்சோ ஆயர்பெருமானே! அச்சோவச்சோ. (3)


நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன*

தேறி அவளும் திருவுடம்பில் பூச*

ஊறிய கூனினை உள்ளே யொடுங்க* அன்று

ஏறவுருவினாய்!அச்சோவச்சோ எம்பெருமான்!வாரா அச்சோவச்சோ. (4)


கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி*

எழலுற்று மீண்டே இருநதுஉன்னை நோக்கும்*

சுழலைப் பெரிதுடைத் துச்சோ தனனை*

அழல விழித்தானே!அச்சோவச்சோ ஆழியங்கையனே! அச்சோவச்சோ. (5)


போரொக்கப் பண்ணி இப்பூமிப் பொறைதீர்ப்பான்*

தேரொக்க வூர்ந்தாய் ! செழுந்தார் விசயற்காய்*

காரொக்கும் மேனி கரும்பெரும் கண்ணனே!*

ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ ஆயர்கள் போரேறே! அச்சோவச்சோ. (6)


மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்*

தக்த திதன்றென்று தானம் விலக்கிய*

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய*

சக்கரக் கையனே!அச்சோவச்சோ சங்க மிடத்தானே! அச்சோவச்சோ. (7)


என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்*

முன்னைய வண்ணமே கொண்டு அளவா யென்ன*

மன்னு நமுசியை வானில் சுழற்றிய*

மின்னு முடியனே! அச்சோவச்சோ வேங்கட வாணனே! அச்சோவச்சோ. (8)


கண்ட கடலும் மலையும் உலகேழும்*

முண்டத்துக் காற்றா முகில்வண்ணாவோ! என்று*

இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள*

மண்டை நிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில் மறுவனே! அச்சோவச்சோ. (9)


துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகைமூட*

மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட*

பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க* அன்று

அன்னம தானானே!அச்சோவச்சோ அருமறை தந்தானே! அச்சோவச்சோ. (10)


தரவுகொச்சகக்கலிப்பா

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை*

அச்சோ வருகவென ஆய்ச்சி யுரைத்தன*

மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்*

நிச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வாரே. (11)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்