6-வது திருமொழி - வேலிக்கோல்

--வெ.ராமன் 07:38, 9 பெப்ரவரி 2006 (UTC)

கோல்கொண்டுவர விளம்புதல் தொகு

         கலித்தாழிசை
வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி*
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு*
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு*
காலிப்பின் போவாற்குஓர் கோல்கொண்டுவா
          கடல்நிற வண்ணற்குஓர் கோல்கொண்டுவா.    (1)
கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்*
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க* நல்
அங்கமுடையதோர் கோல்கொண்டுவா
          அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா.         (2)
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்*
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்வாய் கீண்டான்*
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி*
சிறுக்கன்று மேய்ப்பாற்குஓர் கோல்கொண்டுவா
          தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.         (3)
ஒன்றே யுரைப்பான் ஒருசொல்லே சொல்லுவன்*
துன்று முடியான் துரியோதனன் பக்கல்*
சென்றுஅங்குப் பாரதம் கையெறிந் தானுக்கு*
கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா
          கடல்நிற வண்ணர்க்குஓர் கோல்கொண்டுவா.  (4)
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல்*
ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்*
பாரொன்றிப் பாரதம் கைசெய்து* பார்த்தற்குத்
தேரொன்றை யூர்ந்தாற்குஓர் கோல்கொண்டுவா
          தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.         (5)
ஆலத் திலையான் அரவினணை மேலான்*
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்*
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த*
கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா 
          குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா. (6)
பொன்திகழ் சித்திர கூடப் பொருப்பினில்*
உற்ற வடிவில் ஒருகண்ணும் கொண்ட* அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து* உன்னை
மற்றைக் கண்கொள்ளாமே கோல்கொண்டுவா 
          மணிவண்ண நம்பிக்குஓர் கோல்கொண்டுவா. (7)
மின்னிடைச் சீதை பொருட்டா* இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன்வீழ*
தன்னிக ரொன்றில்லாச் சிலைகால் வளைத்திட்ட*
மின்னு முடியற்குஓர் கோல்கொண்டுவா 
          வேலையடைத்தாற்குஓர் கோல்கொண்டுவா.  (8)
தென்னிலங்கை மன்னன் சிரம்தோள் துணிசெய்து*
மின்னிலங்குபூண் விபீடண நம்பிக்கு*
என்னிலங்கு நாமத் தளவும் அரசென்ற*
மின்னலங்காரற்குஓர் கோல்கொண்டுவா
          வேங்கடவாணர்க்குஓர் கோல்கொண்டுவா.    (9)
                தரவு கொச்சகக்கலிப்பா
அக்காக்காய்!நம்பிக்குக் கோல்கொண்டு வாவென்று*
மிக்கா ளுரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன்*
ஒக்க வுரைத்த தமிழ்ப் பத்தும் வல்லவர்*
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ்வையத்தே.           (10)
      பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=6-வது_திருமொழி_-_வேலிக்கோல்&oldid=3229" இலிருந்து மீள்விக்கப்பட்டது