6-வது திருமொழி - நாவலம்பெரிய

--வெ.ராமன் 08:50, 22 மார்ச் 2006 (UTC)

கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு தொகு

    எண்சீர்க்கழிநெடிலடிலாசிரிய விருத்தம்

நாவலம் பெரிய தீவினில் வாழும்  நங்கைமீர்காள்! இதுஓரற்புதம் கேளீர்*
தூவலம் புரியுடைய திருமால் தூயவாயில் குழலோசை வழியே*
கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்ந்து* எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே.        1

இடவணரை இடத்தோளொடு சாய்த்து இருகைகூடப் புருவம் நெரிந்தேற*
குடவயிறு படவாய் கடைகூடக் கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது*
மடமயில்களொடு மான்பிணைபோலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ*
உடைநெகிழ ஓர்கையால் துகில்பற்றி ஒல்கியோடரிக்கணோட நின்றனரே. 2

வானிலவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன்* நந்த
கோனிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது*
வானிளம்படியர் வந்துவந் தீண்டி மனமுருகி மலர்க்கண்கள் பனிப்ப*
தேனளவு செறிகூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவிசேர்த்து நின்றனரே. 3

தேனுகன் பிலம்பன் காளிய னென்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி*
கானகம் படிஉலாவி யுலாவிக் கருஞ்சிறுக்கன் குழலூதினபோது*
மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியரவர் வெள்கி மயங்கி*
வானகம்படியில் வாய்திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே.    4

முன்நர சிங்க மதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்
மன்னரஞ்சும்* மதுசூதனன் வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க*
நன்னரம் புடைய தும்புரு வோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து*
கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோ மென்றனரே.      5

செம்பெருந் தடங்கண்ணன் திரள்தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்*
நம்பரமன் இந்நாள் குழலூதக் கேட்டவர்கள்  இடருற்றன கேளீர்*
அம்பரம் திரியும் காந்தப்ப ரெல்லாம் அமுதகீத வலையால் சுருக்குண்டு*
நம்பர மன்றென்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து
நின்றனரே.6

புவியுள் நான்கண்ட தோரற்புதம் கேளீர் பூணிமேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து*
அவையுள்நாகத்தணையான் குழலூத அமரலோகத்தளவும் சென்றி சைப்ப*
அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி*
செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே. 7

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்க *
குறுவெயர்ப் புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது*
பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப*
கறவையின் கணங்கள் கால்பரப்பீட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே.8

திரண்டெழு தழைமழை முகில்வண்ணன் செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே*
சுருண்டிருண்ட குழல்தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழலோசை வழியே*
மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர*
இரண்டு பாடும் துலங்காப் புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே. 9

கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதகவாடை*
அருங்கல வுருவி னாயர் பெருமான் அவனொருவன் குழலூதினபோது*
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும் மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும்*
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே.10

குழலிருண்டு சுருண்டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில்*
குழல்முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித் திழிந்த அமுதப் புனல்தன்னை*
குழல்முழவம் விளம்பும் புதுவைக்கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ்வல்லார்*
குழலை வென்ற குளிர்வாயினராகிச் சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே.11

      பெரியாழ்வார் திருவடிகளே சரணம்