4-வது திருமொழி - வெண்ணையளைந்த

--வெ.ராமன் 06:35, 8 பெப்ரவரி 2006 (UTC)

நீராட அழைத்தல். தொகு

 அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
வெண்ணெயளைந்த குணுங்கும்  விளையாடு புழுதியும் கொண்டு*
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்*
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன்*
நண்ண லரிய பிரானே!நாரணா! நீராட வாராய்.                  (1)
கன்று களோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்*
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*
நின்ற மராமரம் சாய்த்தாய்!நீபிறந்த திருவோணம்*
இன்று,நீ நீராட வேண்டும் எம்பிரான்! ஓடாதேவாராய்.           (2)
பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்னெஞ்சம்*
ஆய்ச்சிய ரெல்லாம்கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன்*
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்*
வாய்த்த புகழ்மணி வண்ணா!மஞ்சனமாட நீவாராய்.             (3)
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து*
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே!*
மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும்*
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே! நீராடவாராய்.       (4)
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து*
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ!*
செப்பிள மென்முலை யார்கள்  சிறுபுறம் பேசிச் சிரிப்பர்*
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான்! இங்கேவாராய்.       (5)
எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி*
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே!*
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோத நீர்போலே*
வண்ணம் அழகிய நம்பீ!மஞ்சன மாட நீவாராய்.                (6)
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்*
பிறந்ததுவே முதலாகப்  பெற்றறியேன் எம்பிரானே!*
சிறந்த நற்றாய்அலர்தூற்றும் என்பதனால் பிறர்முன்னே*
மறந்தும்உரையாட மாட்டேன் மஞ்சன மாட நீவாராய்.           (7)
கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து*
பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்*
நின்திறத்தே னல்லன் நம்பீ ! நீபிறந்த திருநல்நாள்*
நன்றுநீ நீராட வேண்டும் நாரணா! ஓடாதே வாராய்.             (8)
பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி*
காணப் பெரிதும்உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்*
நாணெத் தனையு மிலாதாய். நப்பின்னை காணில் சிரிக்கும்*
மாணிக்கமே!என்மணியே!மஞ்சன மாட நீவாராய்.               (9)
கார்மலி மேனி  நிறத்துக் கண்ண பிரானை யுகந்து*
வார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை*
பார்மலிதொல் புதுவைக்கோன் பட்டர் பிரான் சொன்ன பாடல்*
சீர்மலிசெந் தமிழ்வல்லார் தீவினை யாது மிலரே.               (10)
              பெரியாழ்வார் திருவடிகளே சரணம்