4-வது திருமொழி - சென்னியோங்கு

--வெ.ராமன் 10:11, 5 ஜூன் 2006 (UTC)
எம்பெருமான் தமது திருவுள்ளத்தில் புகுந்தமையால் ஆழ்வார் 
         தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்

         அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

சென்னி யோங்கு தண்திரு வேங்கட முடையாய்!* உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ!தாமோதர!சதிரா!*
என்னையும் என்னுடைமையையும்  உன்சக்கரப் பொறியொற்றிக் கொண்டு*
நின்னருளே புரிந்திருந்தேன்  இனிஎன் திருக்குறிப்பே? 				1

பறவை யேறு பரம்புருடா! நீஎன்னைக் கைக்கொண்டபின்*
பிறவி யென்னும் கடலும் வற்றிப் பெரும்பதமாகின்றதால்*
இறவு செய்யும் பாவக்காடு  தீக்கொளீஇ வேகின்றதால்*
அறிவை யென்னும் அமுதவாறு தலைப்பற்றி  வாய்க்கொண்டதே. 		    2

எம்மனா! என்குல தெய்வமே! என்னுடைய  நாயகனே!*
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர்பெறுவார்?*
நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவ மெல்லாம்*
சும்மெனாதே கைவிட்டோடித்  தூறுகள் பாய்ந்தனவே. 				 3

கடல்கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல்*
உடலுருகி வாய்திறந்து  மடுத்துஉன்னை நிறைத்துக் கொண்டேன்*
கொடுமை செய்யும் கூற்றமும் என்கோலாடி குறுகப்பெறா*
தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற் சேவகனே! 				4

பொன்னைக் கொண்டு உரைகல்மீதே நிறமெழ வுரைத்தாற்போல்*
உன்னைக் கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்*
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன்*
என்னப்பா!என்னிருடீகேசா!என்னுயிர்க் காவலனே! 				   5

உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழி யாமல் எல்லாம்*
என்னுடைய நெஞ்சகம்பால்  சுவர்வழி எழுதிக் கொண்டேன்*
மன்னடங் கமழு வலங்கைக் கொண்ட  இராமநம்பீ!*
என்னிடை வந்துஎம் பெருமான்! இனியெங்குப் போகின்றதே? 		         6

பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர் குலபதிபோல்*
திருப்பொலிந்த சேவடி எஞ்சென்னியின் மேல்பொறித்தாய்*
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்! என்றென்றுஉன் வாசகமே*
உருப்பொலிந்த நாவினேனை  உனக்கு உரித்தாகினையே. 			       7

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐதுநொய்தாக வைத்து *என்
மனந்த னுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான்!*
நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக் கண்கள் அசும்பொழுக*
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே! 			     8

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு*ஓடிவந்துஎன்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ!*
தனிக்கடலே தனிச்சுடரே  தனியுலகே என்றென்று*
உனக்கிடமா யிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே. 			 9

                     சாற்றுப்பாட்டுக்கள்

தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங் கொடிபோல்*
சுடரொளியாய் நெஞ்சி னுள்ளே  தோன்றும்என் சோதிநம்பி!*
வடதடமும் வைகுந்தமும் மதிள்துவராபதியும்*
இடவகைகள்  இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே. 		   10

வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயரேற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலப் பாட வல்லார்  தாமும்  அணுக்கர்களே. 				11

          பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.