3-வது திருமொழி - போய்ப்பாடு

--வெ.ராமன் 09:57, 7 பெப்ரவரி 2006 (UTC)

காதுகுத்தல் தொகு

                  பன்னிருநாமம்
         எழுசீர்க்கழிநெடிலடி லாசிரியவிருத்தம்.
போய்ப் பாடுடைய நின்தந்தையும் தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன் கடியன்*
காப்பா ருமில்லை கடல்வண்ணா! உன்னைத் தனியேபோய் எங்கும் திரிதி*
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே! கேசவநம்பீ!உன்னைக் காதுகுத்த*
ஆய்ப்பாலர் பெண்டுக ளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்திநான் வைத்தேன்.    (1)
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப*
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா! இங்கே வாராய்*
எண்ணற் கரிய பிரானே! திரியை எரியாமே காதுக் கிடுவன்*
கண்ணுக்கு நன்று மழகுடைய கனகக் கடிப்பும் இவையா!   		     (2)


வைய மெல்லாம் பெறுவம் வார்கடல் வாழும் மகரக் குழைகொண்டு வைத்தேன்*
வெய்யவே காதில் திரியை யிடுவன் நீவேண்டிய தெல்லாம் தருவன்*
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுட ராயர் கொழுந்தே!*
மையன்மை செய்து இளவாய்ச் சியருள்ளத்து மாதவனே. இங்கே வாராய்.	(3)
வணநன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார்காது தாழப் பெருக்கி*
குணநன் றுடையர் இக்கோபால பிள்ளைகள்  கோவிந்தா! நீசொல்லுக்
கொள்ளாய் *
இணைநன் றழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து*
சுணநன் றணிமுலை யுண்ணத் தருவன்நான் சோத்தம்பிரான்! இங்கே வாராய்.	(4)
சோத்தம்பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்  சுரிகுழலா ரொடுநீபோய்*
கோத்துக் குரவை பிணைந்து இங்குவந்தால் குணங்கொண் டிடுவனோ? நம்பீ!*
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே! திரியிட வொட்டில்*
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே! நீஇங்கே வாராய். 	(5)
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில் விரும்பியதனை நான்நோக்கி*
மண்ணெல்லாம் கண்டு என்மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றிருந்தேன்*
புண்ணேது மில்லைஉன்காது மறியும் பொறுத்து இறைப்போது இருநம்பீ!*
கண்ணா! என்கார்முகிலே! கடல்வண்ணா! காவலனே! முலையுணாயே.	(6)
முலையேதும் வேண்டே னென்றோடி நின்காதில் கடிப்பைப் பறித்தெறிந்திட்டு*
மலையை யெடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய்*
சிலையொன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா! திருவாயர்பாடிப் பிரானே!*
தலைநிலாப் போதே உன்காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்ற மேயன்றே.	(7)
என்குற்றமே யென்று சொல்லவும் வேண்டாகாண்  என்னைநான் மண்ணுண்டே னாக*
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே*
வன்புற் றரவின் பகைக்கொடி வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்*
துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.	(8)
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று*
கையைப் பிடித்துக் கரையுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே?*
செய்தன சொல்லிச் சிரித்து அங்குஇருக்கில் சிரீதரா! உன்காது தூரும்*
கையில் திரியை யிடுகிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே.			(9)
காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்*
தாரியா தாகில் தலைநொந்திடு மென்று  விட்டிட்டேன் குற்றமே யன்றே*
சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி*
ஏர்விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட  இருடீகேசா! என்தன்கண்ணே.	(10)
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடிகமழ் பூங்குழ லார்கள்*
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே! எங்களமுதே!*
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்*
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா! இங்கே வாராய்.		(11)
வாவென்று சொல்லி என்கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை*
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்?  காதுகள் நொந்திடும் கில்லேன்*
நாவற்பழம் கொண்டுவைத்தேன்  இவைகாணாய் நம்பீ!* முன்வஞ்ச
மகளைச்
சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா! இங்கேவாராய்.		(12)
வார்காது தாழப் பெருக்கி யமைத்து மகரக்குழை யிடவேண்டி*
சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல்  சிந்தையுள் நின்றுதிகழ*
பாரார் தொல்புகழான் புதுவைமன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன*
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே. 		(13)
        பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=3-வது_திருமொழி_-_போய்ப்பாடு&oldid=3184" இலிருந்து மீள்விக்கப்பட்டது