10-வது திருமொழி - துப்புடையாரை

--வெ.ராமன் 07:57, 11 மே 2006 (UTC)

அப்போதைக்கு  இப்போதே  சொல்லிவைத்தேன் என்று
     அரங்கத்தரவணைப் பள்ளியானைத் தொழுதல்

       எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!     1

சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தினானே!*
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்தமர்கள்*
போமிடத்து உன்திறத்து எத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை*
ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!         2
 
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது*
நில்லுமின் என்னும் உபாயமில்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே!*
சொல்லலாம் போதே உன்நாமமெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்*
அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே!          3

ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை யறியாப் பெருமையோனே!*
முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத் தாய முதல்வனேயோ!*
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்றலுற்ற*
அற்றைக்கு, நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே!         4

பையர வினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி!*
உய்யஉலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை*
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்*
ஐய! இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே!             5

தண்ணென வில்லை நமன்தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர்*
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமு மாகி நின்றாய்!
எண்ணலாம் போதே உன்நாம மெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்*
அண்ணலே! நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே!         6

செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயகனே! எம்மானே!*
எஞ்சலி லென்னுடை யின்னமுதே! ஏழுலகும் உடையாய்! என்னப்பா!*
வஞ்ச வுருவின் நமன்தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது*
அஞ்சல மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே!        7

நான்ஏதும் உன்மாய மொன்றறியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு* இந்த
ஊனேபுகே யென்று மோதும் போது அங்கேதும் நான்உன்னை நினைக்க மாட்டேன்*
வானேய் வானவர் தங்களீசா! மதுரைப் பிறந்த மாமாயனே!* என்
ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே!             8

குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே! எம்மானே!*
அன்றுமுதல் இன்றறுதியா ஆதியஞ் சோதி! மறந்தறியேன்*
நன்றும் கொடிய நமன்தமர்கள் நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது*
அன்றங்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே!            9

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத் தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர்தாமே.                     10
 
         பெரியாழ்வார் திருவடிகளே சரணம்