பிறன் இல் விழையாமை

திருக்குறள் > இல்லறவியல்

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
  • அறநெறியில் தேர்ந்தவர்களிடம் பிறன் மனையை கைக் கொள்ளும் மடம் இருக்காது.
142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
  • அறத்தின் பக்கம் நிற்பவர் யாரும் பிறன் மனைவியை நாடி நிற்கும் பேதையர் இல்லை.
143. விளிந்தாரின் வேறல்லார் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.
  • நன்கு தெரிந்தவர் வீட்டில் தீமை ஏற்படுத்துபவர் பிணத்துக்கு ஒப்பானவர்
144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
  • தன் தவறான செயலைப் பற்றி திணையளவும் ஆராயாமல் பிறன் மனையில் நுழைபவருக்கு எவ்வளவு துணை இருந்தும் பழியிலிருந்து
மீள முடியாது
145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
  • எளிதாக தன் இழி செயலை நிறைவேற்றலாம் என அடுத்தவர் வீட்டிற்கு செல்பவருக்கு என்றும் விலகாத பழி நேரும்
146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
  • அடுத்தவன் மனைவியை கவர நினைப்பவனுக்கு வந்து சேரும் பகை, பாவம், அச்சம், பழி அகிய நான்கும் விலகாது
147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
  • அறத்தினின்று வழுவாத இல்வாழ்க்கை நடத்துபவன், பிறன் மனைவியை நாடுவதில்லை.
148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
  • பிறர் மனைவியை தவறாக நோக்காமை சான்றோருக்கு பேராண்மை மட்டுமன்றி அறன் சார்ந்த ஒழுக்கமும் ஆகும்.
149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
  • கடல் சூழ் உலகில் பிறன் மனைவியின் தோள் தீண்டாதவரே நம் நலத்துக்குரியவர் ஆவார்.
150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
  • அறன் வழி நில்லாவிட்டாலும் பிறன் மனைவியை வேண்டாமை நன்று.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikibooks.org/w/index.php?title=பிறன்_இல்_விழையாமை&oldid=4858" இலிருந்து மீள்விக்கப்பட்டது