நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/7ம் திருமொழி

--வெ.ராமன் 08:21, 20 ஜூலை 2006 (UTC)--

கண்ணன் வளர்கின்ற சீரை காணப் பெறாமையால் தேவகி புலம்பல்

            எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யத்தடங் கண்ணினன் தாலோ*
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ*
ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய*
தாலொ லித்திடும் திருவினை யில்லாத்  தாய ரில்கடை யாயின தாயே.                      1

வடிக்கொள் அஞ்சன மெழுதுசெம்  மலர்க்கண் மருவி மேலினி தொன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள்  பொலியு நீர்முகில் குழவியே போல*
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் அங்கை யோடணைந் தானையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ!  கேசவா! கெடுவேன்  கெடுவேனே.                    2

முந்தை நன்முறை யுன்புடை மகளிர் முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி*
எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே எழுமு கில்கணத் தெழில்கவ ரேறே!*
உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ்  விரலி னும்கடைக் கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா  நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே.                3

களிநி லாவெழில் மதிபுரை முகமும் கண்ண னேதிண்கை மார்வும்திண் தோளும்*
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும்  தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த
இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் பருகு வேற்கிவள் தாயென நினைந்த*
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த பாவி யேனென தாவிநில் லாதே.                   4
 
மருவு நின்திரு நெற்றியில் சுட்டி அசைத ரமணி வாயிடை முத்தம்*
தருத லும்,உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர*
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து  வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்*
திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற் றாளே .            5

தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால்*
மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ!*
வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சல்*
உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன் என்னை என்செய்யப் பெற்றதெம் மோயே!         6

குழகனே! என்றன் கோமளப் பிள்ளாய்! கோவிந் தா!என் குடங்கையில் மன்னி*
ஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல் ஒருகை யாலொரு முலைமுகம் நெருடா*
மழலை மென்னகை யிடையிடை யருளா வாயி லேமுலை யிருக்கவென் முகத்தே*
எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கந்  தன்னை யுமிழந் தேனிழந் தேனே.                7

முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும் முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்*
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும்  நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்*
அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும்  அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்*
தொழுகை யுமிவை கண்ட அசோதை  தொல்லை யின்பத் திறுதிகண் டாளே.                   8

குன்றி னால்குடை கவித்ததும் கோலக் குரவை கோத்த தும்குட மாட்டும்*
கன்றி னால்விள வெறிந்ததும் காலால்  காளி யன்தலை மிதித்தது முதலா*
வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம் அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன்  காணு மாறினி யுண்டெனி லருளே.                    9

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க*
நஞ்ச மார்தரு சுழிமுலை அந்தோ! சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்*
கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய்  கடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து*
தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன் தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே.                   10

மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து*
எல்லை யில்பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்*
கொல்லி காவலன் மாலடி முடிமேல்  கோல மாம்குல சேகரன் சொன்ன*
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள் நண்ணு வாரொல்லை நாரண னுலகே.                  11

      குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்