நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/2ம் திருமொழி

அழகிய மணவாளன் -2

சந்தக் கலி விருத்தம்


தேட்டரும்திறல் தேனினைத் தென்னரங்கனைத் *திருமாதுவாழ்

வாட்டமில்வன மாலை மார்வனை வாழ்த்திமால் கொள்சிந்தையராய்*

ஆட்டமேவி யலந்த ழைத்தயர் வெய்தும் மெய்யடி யார்கள்தம்*

ஈட்டம் கண்டிடக் கூடு மேலது காணும் கண்பய னாவதே 1


தோடுலாமலர் மங்கைதோளிணை தேய்ந்ததும் *சுடர்வாளியால்

நீடுமாமரம் செற்றதும் நிரை மேய்த்தும் இவையே நினைந்து*

ஆடிப்பாடி அரங்கவோ! என்றழைக்கும் தொண்ட ரடிப்பொடி

ஆடனாம்பெறில்* கங்கைநீர்குடைந் தாடும்வேட்கை யென்னாவதே? 2


ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன் இராமனாய்*

மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி* வண்பொன்னிப்பேர்

ஆறுபோல்வரும் கண்ணநீர்கொண்டு அரங்கன்கோயில் திருமுற்றம்*

சேறுசெய் தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே 3


தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் உண்டலும் உடன்றாய்ச்சிகண்டு*

ஆர்த்ததோளுடை யெம்பிரான் என்னரங்கனுக் கடியார்களாய்*

நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்து மெய்தழும் பத்தொழு

தேத்தி* இன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே 4


பொய்சிலைக்குர லேற்றெருத்த மிறுத்துபோரர வீர்த்தகோன்*

செய்சிலைச்சுடர் சூழொளித் திண்ண மாமதிள் தென்ன ரங்கனாம்*

மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய்*

மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந்து என்மனம்மெய் சிலிர்க்குமே 5


ஆதி யந்தம னந்த மற்புதம் ஆனவானவர் தம்பிரான்*

பாத மாமலர் சூடும் பத்தி யிலாத பாவிகள் உய்ந்திட*

தீதில் நன்னெறி காட்டி யெங்கும் திரிந்து அரங்கனெம் மானுக்கே*

காதல்செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே 6


காரினம்புரை மேனிநல்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய்*

ஆரமார்வன் அரங்க னென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை*

சேரும் நெஞ்சின ராகிச் சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால்*

வார நிற்பவர் தாளிணைக்கொரு வார மாகுமென் னெஞ்சமே 7


மாலை யுற்ற கடல்கிடந்தவன் வண்டுகிண்டு நறுந்துழாய்*

மாலை யுற்ற வரைப்பெருந் திருமார்வனை மலர்க்கண்ணனை*

மாலை ற்றெழுந் தாடிப்பாடித் திரிந்து அரங்கனெம் மானுக்கே*

மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே 8


மொய்த்துக் கண்பனி சோரமெய்கள் சிலிர்ப்பஏங்கி யிளைத்துநின்று*

எய்த்துக்கும்பிடு நட்டமிட் டெழுந் தாடிப்பாடி யிறைஞ்சி*என்


அத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி* அவனுக்கே

பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே 9


அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன் மெய்யடி யார்கள்தம்*

எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம்*

கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன்*

சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே 10

குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்