இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் பொழுது, அவை ஒவ்வொன்றிற்கும் சரியான சான்றுகள் தேவைப்படுகின்றன. சான்றளிப்பதில், சான்றளிப்பவர் யாராகவேனும் இருக்கலாம். ஆனால், சான்றளிப்பதும், அதற்காக விண்ணப்பிப்பதும் ஒவ்வொரு தனி மனிதனின் முதன்மைத் தேவைகளில் ஒன்று. இப்படிச் சான்றளிப்பதில் பெரும்பாலும், பெரும்பாலான உரிமைகளை அரசுகள் தங்களகத்தே கொண்டுள்ளன. பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வரை வாழ்க்கையின் பல நிலைகளில் பல சான்றுகள் நமக்குத் தேவைப்பட்டாலும், அவற்றைப் பெறுவதில் உள்ள நடைமுறைகள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை என்பதால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. எனவே, பொது மக்களுக்குத் தேவையான பொழுது தேவையான தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்நூல் உருவாக்கப்படுகின்றது.

[1]==பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு மற்றும் சான்றிதழ் பெறுதல்==

Registering the Birth and Death and obtaining the birth certificate or death certificate

இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் இந்தியப்பெற்றோர்களுக்கு நிகழும் ஒவ்வொரு பிறப்பிற்கும், அல்லது நிகழும் ஒவ்வொரு இறப்பிற்கும் பதிவு செய்தல் என்பது சட்டப்படி(Registration of Births and Deaths Act, 1969) கட்டாயமாகிறது. எனவே பிறப்பு மற்றும் இறப்பை முறையாகப் பதிவு செய்தல் அனைவரது கடமையாகும். இது திட்டமிடல் உள்ளிட்ட பல பணிகளுக்கு அரசிற்கு உதவிகரமாக இருக்கும். எனவே அனைவரும் பிறப்பு மற்றும் இறப்பைக் கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும்.முன்பெல்லாம் குழந்தை பிறத்தல் என்பது வழக்கமாக வீடுகளிலேயே நிகழும் ஒரு நிகழ்வு என்பதால், மருத்துவச் சான்றிதழ்கள் எவையும் இல்லையென்பதால், உள்ளூரிலேயே உள்ள 'மணியகாரர், 'தண்டல்'காரர்கள்' (சிற்றூர் -கிராம- உதவியாளர்கள்) உள்ளிட்டவர்களே பிறப்பைப் பதிவு செய்வதில் அனைத்து வேலைகளையும் செய்துவிடுவார். ஆனால், தற்காலங்களில் வீட்டிலேயே குழந்தை பிறந்தாலும், அப்பிறப்பைப் பதிவு செய்வது பெற்றோரின் முழு முதல் கடமையாகும். மருத்துவமனையில் பிறந்தால், மருத்துவமனை நிருவாகமே பிறப்பைப் பதிவு செய்து கொடுக்கும். சிற்றூர்களில் அல்லது பேரூராட்சிகளில் ஒரு குழந்தை பிறந்தால், அப்பிறப்பு சிற்றூர் (கிராம) நிருவாக அலுவலரிடம் முறையாக ஒரு மனுக் கொடுப்பதன் மூலம், அல்லது தகவல் தெரிவிப்பதன் மூலம் பதிவு செய்யப்படலாம். நகரங்கள் அல்லது மாநகரங்களில் குழந்தை பிறந்தால் அது சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலரிடம், அல்லது மாநகராட்சி 'வார்டு' அலுவலகத்தில் பதிவு செய்யப்படவேண்டும். இறப்பையும் இவ்வாறே பதிவு செய்ய வேண்டும். இதில் 'கிராம' நிருவாக அலுவலரிடம் பதிவு செய்யப்படும் தகவல்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று, இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் அந்தப் பகுதிக்குச் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். எனவே பிறப்பு அல்லது இறப்பிற்குப் பின்னர் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டால் பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழைச் சம்பந்தப்பட்ட பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான் பெற முடியும். நகரம் அல்லது மாநகரம் என்றால், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கட்டணமும் உண்டு.

குழந்தையின் பிறப்புப் பதிவு செய்யப்பட்டாலும் அக்குழந்தையின் பெயரும் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்படவேண்டும்.இன்றைய சூழலில் பெரும்பாலான அல்லது அனைத்துக் குழந்தைகளுமே மருத்துவமனைகளில் பிறக்கின்றன. இதில், அரசுப் பொது மருத்துவமனைகளில் அதிக அளவில் ஏழை மக்களே மருத்துவம் பார்க்கின்றனர். அவர்களுக்குப் போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததால், மருத்துவமனை நிருவாகமே அவர்களுக்குப் பிறக்கும் குழைந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்து கொடுத்த பின், அவர்கள், அடுத்த சில நாள்களில் அல்லது மாதங்களில் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்களைப் பிறப்புச் சான்றிதழ்களில் பதிவுசெய்யத் தவறிவிடுகின்றனர். இருப்பினும் பிறப்புச் சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்டு, 'தங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வேலை முடிந்துவிட்டதாக' தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.

பிற்காலத்தில் ஒரு நாள் பள்ளியில் சேர்க்கும் பொழுதோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ பிறப்புச் சான்றிதழின் தேவை ஏற்படும்பொழுது அதைப் பார்க்கும் ஒரு அலுவலரால் தான் இந்த உண்மையையே அவர்கள் உணருகின்றனர். அந்த நேரத்தில் உடனடியாக ஓரிரு நாள்களில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதானதல்ல. குழந்தை பிறந்து இரண்டு மூன்று ஆண்டுகள் என்றால், பெற்றோர் எழுதிக்கொடுக்கும் பெயரை எளிதாகப் பதிவு செய்து விடலாம். அதுவே, பத்து ஆண்டுகள் என்றால், அக்குழந்தைக்குப் பள்ளியில் என்ன பெயர் வழங்கப்படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இடம் ஏற்பட்டு விடும். எனவே, பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களைப் 'பரிசீலித்த' பின்னரே குழந்தையின் பெயர் பதிவு செய்து கொடுக்கப்படும். எனவே, குழந்தைக்குப் பெயர் இட்டவுடன் அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்து கொள்வது மிகவும் எளிது.

குழந்தைக்குப் பெயரிட்டவுடன் பெயரைப் பதிவுசெய்யத் தவறியவர்கள், பின்னாளில் அதாவது ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அக்குழந்தை நகரம் அல்லது மாநகரப் பகுதிகளில் பிறந்திருந்தால், சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்திப் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். பொதுவாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குழந்தை பிறந்து அதன் பெயர் பதிவு செய்யப்படத் தவறிவிட்டிருந்தாலும், அதற்குப் பின்பு பல ஆண்டுகள் கழித்தும் அக்குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய, அந்தக் குழந்தையின் பெற்றோரின் தற்போதைய முகவரிச் சான்று (உம்.- குடும்ப அட்டை), குழந்தையின் பெயருக்கான பள்ளிச் சான்று அல்லது பெற்றோரின் 'நோட்டரி' வாயிலாகத் தயாரிக்கப்பட்ட உறுதிச் சான்றுடன் விண்ணப்பித்தால் சில நாள்களில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். ஆனால், சிற்றூர்ப்புறங்களில் குழந்தை பிறந்திருந்தால், குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் பதிவு அலுவலராக அந்தச் சிற்றூர் (கிராம) நிருவாக அலுவலரே பணியாற்றுவதால், அவர்தான் பதிவு செய்திருப்பார். ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்னால் அது வட்டாட்சியரின் நேரடிப் பணியில் வந்துவிடும். எனவே, குழந்தை ஒரு சிற்றூரில் பிறந்து பெயர் பதிவுசெய்யத் தவறிவிட்டிருந்தால், அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து அக்குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பிறப்புப் பதிவேடு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தந்தப் பகுதி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுவிடும். அப்படியே அனுப்பப்பட்டாலும், அப்பதிவேட்டை நிருவகிக்கும் பொறுப்பு சார்பதிவாளருக்கு இருக்கிறதே தவிர, அப்பதிவேட்டில் பதிவு செய்வதற்கோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கோ அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே இது போன்ற தருணங்களில், வட்டாட்சியர் சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து குறிப்பிட்ட பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து, அதில் பெயரைப் பதிவு செய்து, அதன் பின்னர் அப்பதிவேட்டைத் திரும்ப அந்தச் சார் பதிவாளர் அலுவலகத்திற்கே அனுப்புவார். அங்கு மீண்டும் ஒரு விண்ணப்பத்தைப் புதிதாக அளித்துப் பெயர்ப் பதிவுடன் கூடிய ஒரு புதிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இச் சான்றிதழ் எத்தனை நகல்களில் வேண்டுமானாலும் கிடைக்கும். அதற்காக உரிய கட்டணங்கள் கட்ட வேண்டியிருக்கும். இதற்காக, ஒரு தனி வெள்ளைத் தாளில் ஒரு வேண்டுகோளை எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் இரண்டு ரூபாய்க்கான நீதிமன்ற வில்லையை ஒட்டி, அதனுடன் அதற்கான சான்றுகளாக மனுதாரரின் குடும்ப அட்டை அல்லது ஏதாவது முகவரிச் சான்று, குழந்தையின் பெயருடன் கூடிய பள்ளிச் சான்று போன்றவற்றை இணைத்து விண்ணப்பித்தால் வட்டாட்சியர் அவ்வின்னப்பத்தின் மீது உரிய விசாரணை செய்து, விண்ணப்பத்தில் கண்டுள்ள வேண்டுகோள் உண்மையென முடிவு செய்யும் வேலையில், குறிப்பிட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கே வரவழைத்துப் பெயர் பதிவு செய்து மீண்டும் அப்பதிவேட்டை அந்தச் சார்பதிவாளர் அலுவலகத்திற்கே அனுப்பிவைப்பார்.

ஆனால், சிற்றூரில் பிறந்து, பெயர் பதிவு செய்யப்படாத குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய ஒரு பெற்றோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை வேறு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்திருந்தாலும், பெற்றோர் தற்போது வசிக்கும் பகுதியில் உள்ள வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கையில் அந்த வட்டாட்சியர், விண்ணப்பத்தில் கேட்டுள்ள கோரிக்கை உண்மையெனத் தெரிந்தால், அக்குழந்தை பிறந்த சிற்றூர் எந்தப்பகுதியில் வருகிறதோ, அந்தப் பகுதியின் வட்டாட்சியருக்குத் தனது செயல்முறையை ஒரு கடிதம் வாயிலாகத் தெரிவிப்பதோடு, அக்கடிதத்தின் நகலை வின்னப்பதாரருக்கும், தேவைப்பட்டால், குறிப்பிட்ட சார்பதிவாலருக்கும் அனுப்பிவைப்பார். விண்ணப்பதாரர், தனக்கு அனுப்பப்பட்டுள்ள நகலுடன் பிறகு மீண்டும் குறிப்பிட்ட அந்த வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து, அவர் வாயிலாக அந்தப் பகுதியில் உள்ள சார் பதிவாளரின் அலுவலகத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டில் பெயரைப் பதிவு செய்து அதன் படி பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை தனக்கு வேண்டிய எண்ணிக்கையில் நகல்கலாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது ஒவ்வொருவரின் சொந்த ஊரில் அல்லது நிலையான இருப்பிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு தான் அதன் பிறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். அதே போல், ஒருவர் இறந்து விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோ அங்குதான் அவரது இறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் பொழுது இறந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவர் இறந்து விட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்ற நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற பிறகு அங்கு பரிசோதித்த மருத்துவர் நோயாளி ஏற்கனவே சுமார் அரைமணி நேரத்திற்கு முன்னரே இறந்து விட்டார் என்று சொன்னால்? சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னாள் தங்களது மருத்துவ அவசர கால இயக்கூர்தி எந்த ஊரில் வந்து கொண்டிருந்திருக்கும் என்றெல்லாம் குழம்பத் தேவையில்லை; மாறாக, எங்கு முதன் முதலில் ஒரு மருத்துவர் 'ஒருவர் இறந்து விட்டார்' என்று கருதுகிறாரோ அங்கேயே அந்த இறப்பைப் பதிவு செய்யலாம். இறந்தவர் வீட்டிலிருந்து கிளம்பியவுடன் கூட இறந்திருக்க முடியும். அதற்காக அங்கே சென்று தான் அவருடைய இறப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவருடைய இறப்பு எங்கு முதன் முதலில் ஒரு பதிவு பெற்ற மருத்துவரால் உறுதி செய்யப்படுகிறதோ அங்குதான் அவர் இறந்ததாகக் கருதப்படுவார்.

பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழில் பிறந்தவர் அல்லது இறந்தவர் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் தாய் தந்தையர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக்கொள்ளலாம்; அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே, குழந்தையின் பெயரை உறுதி செய்த பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பெற்றோர் சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் மட்டும், பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவர். எனவே, பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


இந்தியப் பெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தைகள் பிறந்தால், அந்நாட்டில் உள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். அதாவது இந்தியாவில் உள்ள ஒரு கணவனும் மனைவியும் பணி நிமித்தமாக, அல்லது குழந்தைப்பேறு மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனைய்ல் மருத்துவம் பார்த்து அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அக்குழந்தையின் பிறப்பு அங்குள்ள தூதரக அலுவலகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். இறப்பும் அவ்வாரே பதிவு செய்யப்படவேண்டும். ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவருக்கு உயர் மருத்துவக் காரணங்களுக்காக அவருடைய உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நடவடிக்கைகளின் போது அந்த நபர் இறந்து விட்டால், அங்குள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.

வான் ஊர்தியில் அல்லது கப்பலில் பயணிக்கும் பொழுது குழந்தை பிறந்தால் அல்லது ஒருவர் இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு முடிகிறதோ அங்குதான் அந்தப் பிறப்பு அல்லது இறப்புப் பதிவு செய்யப்படவேண்டும். எரிபொருள் நிரப்ப அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வான் ஊர்தி அல்லது கப்பல் ஏதாவது ஒரு நிலையில் நிறுத்தப்பட்டால் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார்களோ அங்கு தான் பதிவு செய்யவேண்டும்.

வட்டாட்சியர், பொது மக்கள் அளிக்கும் மனுக்களின் மேல் முடிவெடுக்கும் முறை தொகு

Steps of Thasilthar to make a decision on the applications given by people.

பொதுமக்கள், தங்களுக்குத் தேவைப்படும் பெரும்பாலான சான்றிதழ்களுக்கு வட்டாட்சியரையே சார்ந்திருப்பதால் வட்டாட்சியர்களின் சான்று வழங்கும் செயல்முறைகளைப் பற்றி ஓரளவு தெரிந்துவைத்திருத்தல் ஒரு பொதுத் தேவையாகும். எனவே அதைப்பற்றிச் சிறிது பார்ப்போம்.

மனுதாரர்கள் கிராமங்களில் நிகழும் பிறப்பு , இறப்புகளை முப்பது நாட்களுக்குள் பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும் . . பிறப்பு, இறப்புகளை முப்பது நாட்களுக்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்குள் பதிவு செய்யாமல் விட்டதின் பேரிலும் , இரண்டு ஆண்டுகளுக்கு மேல் என்றால் நீதிமன்ற ஆணையின் பேரிலும் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து சான்றிதழ் வழங்குமாறு வட்டாச்சியர் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆணை பிறப்பிக்கலாம் . இதற்கும் கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை மிகவும் அவசியமாகிறது. வருவாய்த் துறையில் பிறப்பு , இறப்பை பதிவு செய்யும் அதிகாரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது . மனுதாரர் பிறப்பு , இறப்புகளை பிறந்த அல்லது இறந்த முப்பது நாட்களுக்குள் பதிவு செய்திருந்து , 'அந்த பதிவேடுகள்' கிராம நிர்வாக அலுவலரிடம் இருக்கும் ஓராண்டு காலத்திற்குள் சான்றிதழ் பெறவில்லையென்றால் மட்டுமே மனுதாரர் வட்டாச்சியருக்கு விண்ணப்பம் செய்து நேரடியாக சான்றிதழ்கள் பெற முடியம் . பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழ் , அடங்கல் சான்று , அடையாளச் சான்று ,அனுபோகச் சான்று , நில உரிமைச் சான்று , ஜாமீனுக்கு வழங்கப்படும் சான்று ,வீடு, கிணறு , ஆழ்துளை கிணறு இவைகளுக்கு மின் இணைப்பு பெற வழங்கப்படும் சான்று , இவைகளைத் தவிர வேறு எந்த சான்றுகளையும் கிராம நிர்வாக அலுவலரால் நேரடியாக வழங்க இயலாது . வருவாய் ஆய்வாளருக்கு சான்றுகள் வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை . வருமானச் சான்று ,சாதிச்சான்று , இருப்பிடச் சான்று ,வாரிசுச் சான்று ,போன்ற பல்வேறு சான்றுகளின் பேரில் கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை அறிக்கையை தொடர்ந்து வட்டாச்சியர் சார்பாக விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கையை வட்டாச்சியரிடம் சமர்பிப்பது , வட்டாச்சியர் அலுவலகத் தகவல்களை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரிவிப்பது . இதுவே வருவாய் ஆய்வாளரின் முக்கிய பணியாகும் .பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் தனது பரிந்துரையை நேரடியாக வட்டாச்சியருக்கு வழங்குவார் . இதற்கு வருவாய் ஆய்வாளரின் பரிந்துரை தேவையில்லை . .பல்வேறு சான்றுகளை வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் தான் வழங்குவர். இருப்பினும் விண்ணப்பம் வட்டாட்சியருக்குத் தான் அளிக்கப்படவேண்டும். வட்டாட்சியர் தான் வழங்கவேண்டிய சான்றிதழ்களை மட்டும் தானே வழங்குவார் (உம்.:ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் மேலே இருப்பவர்களுக்கான வருமானச் சான்று). இல்லையென்றால், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர் இடத்திலிருந்து சான்று வழங்குவார்கள். எனினும் வழங்கப்படும் அனைத்துச் சான்றிதழ்களுக்கும் வட்டாட்சியரே பொறுப்பு ஆவார்.

இப்படி வட்டாட்சியர் சான்று வழங்குவதற்குத் தேவையான விசாரணையை நடத்தவேண்டியிருக்கிறது. ஆனால், வட்டாட்சியரே முன் நின்று அனைத்து விசாரணைகளையும் நடத்துவதென்பது நடைமுறையில் வாய்ப்பற்ற ஒன்று. எனவே, அவர் தன்னிடம் அளிக்கப்படும் மனுக்களை உரிய உத்தரவுடன்- அதாவது அம்மனு மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு நில வருவாய் அலுவலருக்கு அனுப்புவார். நில வருவாய் அலுவலர், அவற்றை ஊர் வாரியாகப் பிரித்து சம்பந்தப்பட்ட சிற்றூர்(கிராம) நிருவாக அலுவலருக்கு அனுப்புவார். அவர் அம்மனு மீது அனைத்து விதங்களிலும் விசாரணை செய்து அந்த அறிக்கையை மீண்டும் நில வருவாய் அலுவலருக்கு அனுப்புவார். இங்கே, சிற்றூர்(கிராம) நிருவாக அலுவலர் சம்பந்தப்பட்ட மனுதாரரை நேரில் அழைத்து விசாரிக்கலாம், அதனுடன் அவருடைய உதவியாளர்களிடம் விசாரிக்கலாம், அல்லது தான் ஒரு வகையில் விசாரித்துக் கண்டு பிடித்த உண்மைகளை மேலும் உறுதிப்படுத்த சம்பந்தப்பட்டவர் குடியிருக்கும் தெருவைச் சேர்ந்த அல்லது பகுதியைச் சேர்ந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தலாம். அப்படி நடத்திய விசாரணையில் கண்டுபிடித்த உண்மைகளை நில வருவாய் அலுவலரின் மூலம் வட்டாச்சியருக்கு அறிக்கையாக அளிப்பார். அதன் பின்பு நில வருவாய் அலுவலர் மேலும் மனுதாரரிடம் அல்லது வேறுவகையில் சிற்றூர் நிருவாக அலுவலர் அளித்த அறிக்கையில் உள்ள தகவல்கள் உண்மையா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்துவார். தேவைப்பட்டால், சிற்றூர் நிருவாக அலுவலர் செய்த அனைத்து வேலைகளையும் நில வருவாய் அலுவலரும் செய்து உண்மைகளைக் கண்டறிந்து அவற்றைத் தனியாக ஒரு அறிக்கையாகத் தயாரித்து, சிற்றூர் நிருவாக அலுவலரின் அறிக்கையுடன் சேர்த்து வட்டாட்சியருக்கு அனுப்புவார். இந்த இரண்டு அறிக்கைகளையும் சான்றாக வைத்துக் கொண்டு துணை வட்டாட்சியர்கள் அல்லது வட்டாட்சியர் சான்றிதழை வழங்குவர். இதில் சிற்றூர் நிருவாக அலுவலரும், நில வருவாய் அலுவலரும் அளிக்கும் அறிக்கைகளில் முரண்பட்ட கருத்துக்கள் இருந்தால், வட்டாட்சியர் தனிப்பட்டு இருவரையும் அழைத்து விசாரிப்பார். அதில் மன நிறைவு ஏற்படா விட்டால், அவரும் அனைத்து விசாரணைகளையும் முதலில் இருந்து தொடங்கி மீண்டும் செய்வார். . ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு மேலே ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வருமானச் சான்று வழங்குகையில் சிற்றூர் நிருவாக அலுவலர் மற்றும் நில வருவாய் அலுவலர் ஆகியோர் அளிக்கும் அறிக்கைகளையும் தாண்டி, வட்டாட்சியரும் தனிப்பட்டு விசாரணை நடத்துவார்.ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரின் பரிந்துரை இல்லாமல் மேற்கண்ட சான்றுகளை வட்டாச்சியரால் வழங்க இயலாது . மனுதாரர்கள் ஒவ்வொரு சான்றுகளுக்காகவும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ,வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ,வட்டாச்சியர் அலுவலகம் , என அலைவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சான்றிதழ்களும் இணைய வழியாக வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன்படி தற்போது ஒரு சில மாவட்டங்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது .இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கணிணி மையம் என்ற தனியார் அமைப்பிற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் இந்த மக்கள் கணிணி மையத்திற்கு சென்று பல்வேறு சான்றுகள் வேண்டி இணைய வழியாக விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட நாளுக்கு பிறகு சான்றிதழ்களை மக்கள் கணிணி மையம் வழியாகவே பெற்றுக்கொள்ள முடியும் . ஆனால் இந்த சேவையில் ஒரு சில குறைபாடுகளையும் காண முடிகிறது .பொதுமக்கள் மக்கள் கணிணி மையம் வழியாக பல்வேறு சான்றுகள் வேண்டி விண்ணப்பம் செய்து கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர் ,வட்டாச்சியர் என யாரையும் சந்திக்காமலே சான்றிதழ் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது .பொதுமக்கள் விண்ணப்பம் செய்வதோடு தனது வேலை முடிந்தது.என்றென்னி கிராம நிர்வாக அலுவலரின் ,வருவாய் ஆய்வாளரின் ,வட்டாச்சியரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தனது வேலையை பார்க்க சென்று விடுகின்றனர் .குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதால் விசாரணை மேற்கொள்ளாமல் சான்றிதழ் வழங்கும் சூலல் உருவாகியிருக்கிறது .மக்கள் கணிணி மையம் தனியார் அமைப்பாக இருப்பதாலும் , தகவல் தொழில் நுட்பங்கள் பெருகி வருவதாலும், எந்த ஒரு தகவலையும் தவறாக காட்டும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது . தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் அவற்றிற்கு இல்லை . எனவே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு இவ்வசதிகளை வழங்குவதே சரியானதாக இருக்க முடியும் .கிராம நிர்வாக அலுவலரைக் கூடச் சந்திக்காமல் சான்றிதழ் பெறுவது பல தவறுகளுக்கு வழி வகுக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும் .

அடையாளச் சான்றிதழ் பெறுதல் தொகு

தற்போதைய சூழ்நிலையில், சான்றிதழ்களிலேயே மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுவது அடையாளச் சான்றிதழாகும் . வாக்காளர் அடையாள அட்டை பெறாத , குடும்ப அட்டையில் பெயர் இல்லாத , முகவரிக்கான எந்த ஆவணமும் இல்லாத , ஒரு கிராமத்தில் நிலையாக வசித்து வரும் ஒருவருக்கு , குடும்ப அட்டை பெற , வாக்காளர் அடையாள அட்டை பெற , வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்க ,மின் இணைப்பு பெற , கியாஸ் இணைப்பு பெற , அரசின் சலுகைகளைப் பெற , பல்வேறு சான்றிதழ்கள் பெற , என அனைத்திற்கும் தேவைப்படும் அடிப்படைச் சான்றிதழாக அடையாளச் சான்றிதழ் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது . கிராம நிர்வாக அலுவலரே இச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளார் .

வாரிசுச் சான்றிதழ் தொகு

Obtaining Legal Heir-ship Certificate.

ஒருவர் இறந்த பின் அவருடைய சொத்துக்களைப் பிரிப்பதில் வாரிசுச் சான்றிதழின் பங்கு மிக மிக இன்றியமையாதது. வாரிசுச் சான்றிதழ் மதச் சட்டங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு முறையில் வாரிசுச் சான்று வழங்கப்படுகிறது. இந்துக்களுக்கு இந்து திருமணச் சட்டத்தின் வழிகாட்டல்களின் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


ஒருவர் ஒரு அசையா அல்லது அசையும் சொத்தை வாங்க முற்படுகிறார் என்றால், அச் சொத்தின் உரிமையாளர் மரணமடைந்து விட்டிருந்தால், அச் சொத்தின் தற்போதைய உரிமையாளர் யார் என்ற கேள்வி எழும். இதில் யாரோ ஒருவர் நான்தான் இறந்தவரின் வாரிசு என்று சொல்லி அச் சொத்தை விற்கும் நிலை உள்ளது அல்லவா? அப்படி அவரை நம்பி அச்சொத்தை அவர் வாங்கிவிட்டால், பின் வேறொரு காலத்தில் மற்ற ஒருவர் வந்து இறந்தவருக்கு நானும் ஒரு வாரிசு; இப்படியிருக்கையில் அந்தச் சொத்தை வாங்கியது செல்லாது; அல்லது எனக்கும் அந்தச் சொத்திற்கு உரிய பயனை பணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ அளிக்க வேண்டும் என்று கோரினால்..... இது புதிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கத்தான் வாரிசுச் சான்றிதழ் என்ற நடைமுறை வழக்கிற்கு வந்தது. அதாவது ஒரு சொத்தின் உரிமையாளர் ஒருவர் இறந்துவிட்டால், அச்சொத்தைச் சரியான வாரிசுகளின் பெயரில் உரிமை மாற்றம் செய்து வைத்துக்கொள்ளவோ அல்லது விற்பனை செய்யவோ வாரிசுச் சான்றிதழ் தான் இன்றியமையாத தேவையாகும். அசையாச் சொத்துக்களைப் பொறுத்தளவில் அவை நிலம் அல்லது நிலத்தின் மேலுள்ள மரங்கள், வீடுகள், வணிகக் கட்டிடங்கள் மற்ற அனைத்துவகையான உடைமைகள் அடங்கிய நிலம் என்ற நிலையில் அவற்றிற்குப் 'பட்டா' எனப்படும் உரிமைச் சான்று வருவாய்த் துறையினரால் வழங்கப்படுகிறது. இந்தப் 'பட்டா' வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய வாரிசுச் சான்றிதழின் அடிப்படையிலேயே அவருடைய வாரிசுகளுக்குப் 'பட்டா' மாறுதல் செய்து தரப்படுகிறது. வாரிசு யாரெனத் தெரியாத நிலையில் 'பட்டா' மாறுதல் செய்வதும் இயலாத செயலே ஆகும்.அசையும் சொத்துக்களைப் பொறுத்தளவில் பல உரிமைச் சான்றிதழ்கள் உள்ளன. அவற்றிற்கும் உரிய வாரிசுச் சான்றிதழ் இருந்தால் தான் சரியான வாரிசுகளுக்கு உரிமைமாற்றம் செய்து தர முடியும். எடுத்துக்காட்டாக, ஒருவர் இரண்டு மகிழ்வுந்துகள், ஒரு பேருந்து, அதற்கான வழித்தட உரிமை, வங்கியில் பொன் அணிகலன்கள் போன்றவையை வைத்துள்ளார் எனவும் அவர் இறந்து விட்டார் எனவும் வைத்துக்கொண்டால், அவர் வைத்திருக்கும் ஊர்திகள் குறித்து போக்குவரத்துத் துறையில் வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், வங்கியிலும் உரிய வாரிசுச் சான்றிதழ்களை வழங்கியே அச் சொத்துக்களின் உரிமையைத் தற்போதைய வாரிசுகளுக்கு மாற்ற முடியும்.


வாரிசுச் சான்றிதழ் என்பது சொத்துக்கள் குறித்த நடைமுறைகளுக்கே பெரும்பாலும் தேவைப்படுவதால், இது மிகவும் இன்றியமையாத ஒரு சான்றிதழாகக் கருதப்படுகிறது. இச்சான்றிதழில் உள்ள, வாரிசுகள் குறித்த அனைத்துத் தகவல்களுக்கும் வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர் பெயர் விட்டுப்போயிருந்து அது பின்னாளில் ஒரு பிரச்சினையானாலும் அதற்கும் வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். எனவே வட்டாட்சியர்கள் இதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.


தற்பொழுது நடைமுறையில் வாரிசுச் சான்றிதழ்களுக்கு அரசு அளித்துள்ள படிவமும், பெரும்பாலும் அனைத்து வட்டாட்சியர்களும் அளிக்கும் வாரிசுச் சான்றிதழ்களும் வாரிசுகள் குறித்த முழுத் தகவல்களையும் அளிக்கவல்லவை அல்ல. இன்றைய நிலையில் உள்ள வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம்( http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf) முதல் நிலை வாரிசுகளின் பெயர்கள் மட்டும் இடம்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கு முழுப் பயனை அளிக்கவல்லதல்ல! வாரிசுகளில் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிசுகள் மற்றும் மூன்றாம் நிலை வாரிசுகள் என அனைத்துத் தகவல்களும் இடம்பெறவேண்டும். இல்லையென்றால், வாரிசுச் சான்றிதழின் நோக்கம் நிறைவேறாது.

இந்த விண்ணப்பத்தில் கீழே ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் ஐந்தாவது கலத்தில் ஒரு வாரிசு திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்ற ஒரு கேள்வி இடம் பெற்று உள்ளது. அது அத்துடன் முடிந்துவிடுகிறது. இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

ஒருவர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு, அவர் வாழும் ஊரில் இல்லாமல் சுமார் நூறு 'கிலோ மீட்டர்' தொலைவில் பரம்பரைச் சொத்தாக ஒரு ஐம்பது 'ஏக்கர்' விவசாய நன்செய் நிலம் உள்ளது என்றும் வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; அந்த இரண்டு மகன்களில் ஒருவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் எனவும் வைத்துக்கொள்வோம். இங்கு இறந்து போனவரின் பரம்பரைச் சொத்தான ஐம்பது 'ஏக்கர்' நிலத்தை யாருக்கும் உரிமை மாற்றம் செய்யாமல் இறந்துவிடுகிறார். அவர் இறந்த உடன் அந்தச் சொத்து சட்டப்படி அந்தக் குடும்பச் சொத்தாக மாறிவிடுகிறது. அச்சொத்தில் அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், திருமணமான ஒரு மகனின் மனைவி மற்றும் அவரின் இரு குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உரிமை உள்ளது. தற்போது வழங்கப்படும் வாரிசுச் சான்றிதழில் இறந்தவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மட்டுமே இடம் பெறுவர். ஒரு மகன் திருமணமானவர் என்று வேண்டுமென்றால் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அவருடைய மனைவி அல்லது அவருடைய குழந்தைகள் குறித்த எந்த விவரமும் இருக்காது. ஆக, இறந்தவருடைய சொத்துக்கான 'பட்டாவை' மாற்றும் பொழுது வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் இறந்தவரின் மனைவி, மற்றும் இரண்டு மகன்கள் பெயரிலேயே புதிய 'பட்டாவை' வழங்குவார்கள். அப்படி வழங்கப்படும் பட்டாவையும் அவர்கள் மூவர் பெயர்கள் மட்டுமே உள்ள வாரிசுச் சான்றிதழையும் வைத்துக்கொண்டு அச்சொத்தை இந்த மூவருமே இன்னொருவருக்கு விற்றுவிட முடியும். திருமணமான மகன் தனது மனைவிக்குத் தெரியாமல் இதைச் செய்யமுடியும். இவர்களின் சொத்து வெளியூரில் இருப்பதால், அங்குள்ளவர்களுக்கு இவர்களின் வாரிசுகள் பற்றிய தகவலும் தெரியாது. அவர்கள் என்ன செய்வார்கள்? பட்டாவையும் அவர்கள் மூவர் பெயர்கள் மட்டுமே உள்ள வாரிசுச் சான்றிதழையும் மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தான் அச்சொத்தின் முழு உரிமையாளர்கள் என்று நினைத்து விடுவார்கள்; அங்குள்ள ஆவணப் பதிவாளரும் 'பட்டா' மற்றும் வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் சொத்தின் உரிமையை மாற்றி, எந்தவித ஆட்சேபனையும் இன்றிப் பதிவு செய்து கொடுத்துவிடுவார். இங்கே திருமணமான ஒரு மகனின் மனைவியும், குழந்தைகளும் ஏமாற்றப்பட நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

ஒரு சொத்தை வாங்கும் எவரும், சொத்தை வாங்கும் பொழுது வாரிசுச் சான்றின் அடிப்படையிலேயே வாரிசுகளைக் கண்டறிய முடியும். ஆனால், இப்படி வட்டாட்சியர்கள், வாரிசுச் சான்றிதழில் நேரடியான வாரிசுகளை மட்டுமே கொண்டு வருகிறார்கள் என்ற நிலையில் மற்ற வாரிசுகளை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? ஒருவேளை அந்த நேரடியான வாரிசுகளில் ஒருவர் ஏறகனவே இறந்துவிட்டிருந்தால், அவருக்குத் தனியாக இன்னொரு வாரிசுச் சான்றிதழ் வாங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இது தேவையற்றது. இந்தத் தேவையற்ற அலைச்சலைக் குறைக்க, இறந்தவரின் மகன் மற்றும் மகள்கள் குறித்த விவரங்கள், அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் குறித்த விவரங்களையும் சேர்த்தே வழங்கவேண்டும். அதேபோல, ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அவருக்கு வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் வழங்குவதில்லை. மாறாக, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு (பரிகாரம்) தேடிக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. இதுவும் தவறு. ஒருவர் இறந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்ட பின்பு, அவருடைய வாரிசுகளைக் கண்டுபிடிப்பதில் பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்தால், அல்லது வாரிசு உரிமையில் சிலர் பிரச்சினை செய்தால் மட்டுமே வட்டாட்சியர் அந்த வாரிசுச் சான்றிதழுக்கான மனுதாரரிடம் நீதிமன்றத்தின் வாயிலாகத் தீர்வு பெற அறிவுறுத்தலாம். மற்ற வழக்கமான நிலைகளில் ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும் வட்டாட்சியரே வாரிசுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்பதே உண்மை. இதுவே சட்டத்தின் மற்றும் பொது மக்களின் தேவையாகும். மேலும், ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக 'அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்' என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் வழங்கலாம். இல்லையெனில், அதாவது ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவர் காணாமல் போனது குறித்துக் காவல்துறையில் சரியான புகார் அளித்தும், 'அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார்' எனச் சட்டப்பூர்வமான சான்றுகளின்றி ஒருவர் வந்தால், காணாமல் போனவரின் பெயரையும் சேர்த்தே வாரிசுச் சான்றிதழ் வழங்கமுடியும். இதையும் பல வட்டாட்சியர்கள் செய்வதில்லை.

ஒருவர் தனது பெயரில் வங்கியில் பலகோடி ரூபாய்களை வைப்புநிதியாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது குடும்பத்துடன் வேறு ஒரு இடத்திற்குத் தனது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கிறார் எனவும் வைத்துக்கொள்வோம். பின்பு சில நாள்களில் அவர் மரணமடைந்து விட்டால், அவருடைய மனைவி வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் பொழுது, 'அவர் தற்போதைய வசிப்பிடத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு முன் தான் வந்தார்; ஆனால் பல்லாண்டுகள் வேறு ஒரு இடத்தில் வசித்திருக்கிறார்; அங்கு இன்னொரு திருமணம் செய்திருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது; அப்படித் திருமணம் செய்திருந்தால் அங்கும் வாரிசுகள் இருக்கலாம்' போன்ற சந்தேகங்கள் வட்டாட்சியருக்கு ஏற்படுமாயின், உடனடியாக அவர், மனுதாரரின் கணவர் முன்பு வசித்த பகுதியின் வட்டாட்சியருக்கு ஒரு அலுவல் சார் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கலாம். அப்போது அந்த வட்டாட்சியரும் அவர் முன்பு வசித்த பகுதி சிற்றூர்(கிராம) நிருவாக அலுவலர் மற்றும் நில வருவாய் அலுவலரிடம் அறிக்கை பெற்று அதை இந்த வட்டாட்சியருக்கு அனுப்பினால், அதையும் ஒரு சான்றாக வைத்துக்கொண்டு இந்த வட்டாட்சியர் சான்று வழங்குவார்.

வாரிசுச் சான்று வாங்குவதற்கு உரிய படிவத்தில் (படிவம் பெற: http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf) விண்ணப்பிக்க வேண்டும்.

எந்த ஒரு சட்டம் அல்லது அரசு ஆணை அல்லது அரசு விதியாகினும் அது மக்களுக்குச் சிறந்த பணிகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே உருவாக்கப்படுகின்றது. எனவே, சட்டத்தை, விதியை, அல்லது அரசாணையைக் காரணம் காட்டி ஒரு பணியினை முடிக்கவேண்டுமே ஒழிய, எந்தப் பணியையும் நிறுத்தி வைக்கக் கூடாது. எந்த நிலையிலும் எந்த ஒரு சான்றிதழையும் ஒருவருக்குக் கொடுக்கக்கூடாது என்று எந்த நிலையிலும் ஒரு வட்டாட்சியர் எளிமையாக முடிவு எடுத்துவிடக்கூடாது! சட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகப் பணியாற்றுவதற்கேயன்றி, பணிகளை மறுப்பதற்காக அல்ல என்பதை எந்த ஒரு அரசு அலுவலரும் உணரவேண்டும்.

வருமானச் சான்றிதழ் தொகு

Community, Income, and Residential Certificates.

சாதி,வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால், இம்மூன்றையும் ஒரே விண்ணப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இவை மூன்றும் எவ்விதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. நாம் இங்கு இம்மூன்றையும் தனித்தனியாக எப்படிப் பெறுவது என்பதைத் தனித்தனித் தலைப்புக்களில் பார்ப்போம். வருமானச் சான்றிதழ், பள்ளி கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக்கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும், வங்கியில் கடன் பெற, மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும், நடுவண் அரசுப்பணிகளில் நேரடியாக அல்லது ஒன்றிய அரசுப்பணியாளர் தேரவானையத் தேர்வுகள் வாயிலாகப் பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது.

இந்த வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு அதற்கென உள்ள விண்ணப்பத்தில் சரியான நீதிமன்ற வில்லைகள் ஒட்டி, அதனுடன் மனுதாரர் வாக்குமூலத்தையும் இணைத்து வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கவேண்டும். இந்த விண்ணப்பத்தை இங்கே பெறலாம்: http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

ஆண்டு வருமானம் பன்னிரெண்டாயிரத்திற்குக் குறைவாக உள்ளவர்கள் ரூபாய் இரண்டுக்கும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் பன்னிரெண்டுக்கும் நீதிமன்ற வில்லை ஓட்ட வேண்டும். தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஓட்ட வேண்டியது இல்லை.வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார். ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மண்டலத் துணை வட்டாட்சியர்களும், அதற்கு மேல் ரூபாய் மூன்று இலட்சம் வரை வட்டாட்சியரும் சான்று வழங்குவர். இச் சான்றிதழுக்காக அரசு அளித்துள்ள விண்ணப்பப் படிவமும் முழுமையாக இல்லை. அதில் இன்னும் கூடுதல் வினாக்கள் இடம்பெறவேண்டும். உதாரணமாக, விண்ணப்பதாரரின் குடும்பத்தில் வேறு எவருக்கேனும் வருமானம் இருந்தால் அதைக் குறிக்க எந்த வசதியும் இல்லை. குறைந்தது, 'கூடுதல் தகவல்களுக்கு கூடுதல் தாள்கள் இணைக்கவும்' என்ற குறிப்பாவது இருக்க வேண்டும், அல்லது விளக்கமாக, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் வருமானம் பெறும் உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் வயது, வருமானத்திற்கான காரணிகள் என்று சில கேள்விகள் இடம் பெறலாம். இதனால், பல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதிலிருந்து, சான்றிதழ் பெறத் தேவையான, மேலும் விவரங்களை அளிப்பது வரை மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

வருமானம் என்பது மாறும் தன்மையுடன் இருப்பதால், வருமானச் சான்றிதழ் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல. எப்பொழுது என்ன காரணத்திற்காக வருமானச் சான்றிதழ் வாங்கப்படுகிறதோ, அப்பொழுது அந்தக் காரணத்திற்காக மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும். பிறகு மீண்டும் வேண்டுமென்றால், இன்னொரு முறை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

என்னைப் பொறுத்தளவில், வருமானச் சான்றிதழ் வாங்கும் தேதி, வருமானம் உள்ளிட்ட தகவல்களை, விண்ணப்பதாரரின் ஏதாவது ஒரு பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, குடும்ப அட்டையில் பதிவுசெய்யலாம். ஏனென்றால், பொதுமக்களில் சிலர், அரசிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால், குறைந்த அளவு வருமானத்தையும், வங்கியில் கடன் வாங்குவது உள்ளிட்ட வேலைகளுக்கு அதிக வருமானத்தையும் குறிப்பிட்டுச் சான்றிதழ் கேட்கின்றனர். இது அரசை முற்றிலும் ஏமாற்றுவதோடு இல்லாமல், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களையும் ஏமாற்றுவதாகும். வருமானச் சான்றிதழ் வழங்கும் போது, அதைத் தகுந்த வகையில் பதிவு செய்யும்பொழுது, அதே நபர் மீண்டும் வருமானச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், முந்தைய விண்ணப்பத்திற்கும் தற்போதைய விண்ணப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து, அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து, ஏமாற்றுவதைத் தவிர்க்கலாம்.

சாதிச் சான்றிதழில் பதிவிட்ட தவறான ஜாதியை மாற்று தொகு

Community Certificate

வருமானச் சான்றிதழ் போலவே சாதிச் சான்றிதழும் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது. இச் சான்றிதழும் ஒரு தற்காலிகச் சான்றிதழே ஆகும். எவரும் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்ற போதிலும், வகுப்பு என்பது மாற வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மாற்றிக்கொண்டால், வேருவகுப்பிற்குச் சென்றுவிடுவார். அதாவது, ஆங்கிலத்தில் என்று அழைக்கப்படும் இச்சான்றிதழ் தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆனால், சாதிச் சான்றிதழ் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, சாதியை மாற்றமுடியாவிட்டாலும், வகுப்பு என்பது நிலையானது அல்ல. எனவே, சாதிச் சான்றிதழும் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல. இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல வருடங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும், மாணவர்களின் பெற்றோர் இடையில் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது சாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ளவேண்டும். கல்விக் காரணங்களைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக இச் சான்றிதழ் வேண்டுமென்றால், உதாரணமாக இரண்டு பெண் குழந்தைகள் நலத் திட்டத்திற்கு இச்சான்றிதழ் வேண்டுமென்றால், அதற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் பயன்படுத்தும்படியே வழங்கப்படும்.

வழக்கம் போல், இச் சான்றிதழும் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளும் ஒரு சான்றிதழே ஆகும். இச் சான்றிதழுக்கான விண்ணப்பம் இந்த முகவரியில் கிடைக்கும்:http://www.tn.gov.in/appforms/cert-community.pdf (இந்த விண்ணப்பத்தில், எண் 5, 6, மற்றும் 7 ஆகியவை குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று உள்ளிட்டவைகளைக் கேட்கின்றன. இருப்பினும் இவை எதுவும் இல்லாத பொழுது, இவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.) .


இச் சான்றிதழ் தேவைப்படுவோர், தங்களது குடும்ப அட்டையின் நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வேறு ஆவணங்கள் ஏதாவது இருப்பின் கூடுதலாக அளிக்கலாம்; ஆனால் கட்டாயமில்லை. பொதுவாக மனுவுடன் கூடுதல் ஆவணங்களை/ சான்றுகளை இணைப்பது எதற்கென்றால், வட்டாட்சியரின் பணிகளில் ஒரு எளிமையை கொண்டுவந்து, சான்றிதழை விரைவாகப் பெறுவது ஒன்றுதான் காரணம். சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் பொழுது, குடும்ப அட்டை கூட இருந்தால் மட்டுமே அளிக்க வேண்டும். ஒருவருக்குக் குடும்ப அட்டையே இல்லை; எனவே அவருக்குச் சாதிச் சான்றிதழே வாங்க முடியாது என்பதெல்லாம் தவறு. மனுதாரர் தன்னிடம் வேறு சான்று/ஆவணங்கள் எவையும் இல்லையென்றால், மனுவை மட்டும் உரிய முறையில் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. இப்படி மனு அளிக்கும் பொழுது, சான்றிதழ் பெற இரண்டு அல்லது மூன்று நாள்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ளப்படும். எனினும் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையற்ற கால தாமதத்தை வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால், வட்டாட்சியர் அலுவலகம் தான் அடிப்படைச் சான்றுகளை அளிக்கும் ஒரு அலுவலகமாகும். அவர்களே பொது மக்களிடம் ஏதாவது சான்று கொடுத்தால் தான் பொது மக்கள் கேட்க்கும் சான்றினை வழங்க முடியும் என்று கேட்பது முறையல்ல. எந்த ஆவணமும் இணைக்கப்பட முடியாத பொழுது, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான சான்று பெற, வட்டாட்சியருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் தேவை.

அதாவது தங்களது கோரிக்கைக்கு வலுவூட்டும் காரணிகளை அளித்தல் உள்ளிட்ட சில கூடுதல் பணிகளைச் செய்யலாம். இதுவும் கட்டாயமல்ல. ஒரு வட்டாட்சியருக்கு, எவ்வகையிலும் விசாரித்து எந்த உண்மையையும் கொண்டுவரத் தேவையான அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்கள் இருந்தால் அளிக்கலாம்; இல்லாவிட்டால் வட்டாட்சியரே சரியான சான்று வழங்குவார்.

இருப்பிடச் சான்றிதழ் தொகு

Residential Certificate and Nativity Certificate

நம்மில் பலர் இருப்பிடச் சான்றிதழுக்கும் பிறப்பிடச் சான்றிதழுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குழம்பிக்கொள்கிறோம். இருப்பிடச் சான்றிதழ் என்பது வழக்கமாக ஒருவர் எங்கு வசிக்கிறார் என்பதைக் காட்டும் சான்றிதழ் ஆகும். ஆனால், பிறப்பிடச் சான்றிதழ் என்பது ஒருவர் எங்கு பிறந்தார், அவர் பிறக்கும் பொழுது அவர் குடும்பம் எங்கு வசித்தது போன்ற தகவல்களைத் தரும் சான்றிதழ் ஆகும். இவை இரண்டிற்குமே ஒருவர் விண்ணப்பிக்கும் பொழுது எங்கு வசிக்கிராரோ அந்தப் பகுதி வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த விசாரணை வாயிலாக மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின்னர், மனுதாரருக்கு மேற்படிச் சான்றிதழை வழங்குவார்.

இருப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தினை இந்த முகவரியில் பெறலாம்: http://www.tn.gov.in/appforms/cert-residential.pdf

பிறப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தினை இந்த முகவரியில் பெறலாம்: http://www.tn.gov.in/appforms/cert-nativity.pdf

பொதுவாக இருப்பிடச் சான்றிதழ் என்பது குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு தேவையற்றது. ஆனால், பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தாங்கள் பள்ளியில் சேர்வதற்குத் தேவையான சான்றிதழ் வாங்கும் பொழுது- அதாவது சாதி மற்றும் வருமானச் சான்றிதழ் வாங்கும் பொழுது இருப்பிடச் சான்றிதழையும் வாங்குகின்றனர். குடும்ப அட்டையே ஒரு இருப்பிடச் சான்றிதழே ஆகும். குடும்ப அட்டை இல்லாதவர்கள் வேண்டுமென்றால், தனியாக இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் பொழுது மனுவின் கோரிக்கைக்கு சான்றாக வழக்கமாக மற்ற சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அளிக்கும் சான்றுகளைப் போலவே தங்கள் பகுதிப் பொது மக்கள் பத்துப் பேருடைய வாக்குமூலங்களை இணைக்கலாம்.

'சொத்து பதிவு செய்தல்' விண்ணப்பம் அளித்தல் தொகு

Applying for Patta Name Transfer ie. Changing the Name of the Owner of an immovable property like farm lands.

பொதுவாக வீடுகள், கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த உரிமைகளை மாற்றும் பொழுது, அந்த உரிமை மாற்றத்தை முறையாக ஆவணப்படுத்தி, அந்த ஆவணத்தை பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்த பின்னர் அதுவே அச் சொத்தின் உரிமையைச் சொத்தை வாங்குபவருக்கு அளித்து விடும். என்றாலும், அந்த உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும். அந்த அங்கீகாரமே 'பட்டா' எனப்படும். அதாவது ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மற்றொருவருக்கு விலைக்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், அச்சொத்தை வாங்குபவருடன் சேர்ந்து, அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்த வேண்டும். இப்படி ஆவணப்படுத்துகையில், ஒரு சொத்தை விற்பவரே இந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்தலாம். அல்லது இதற்காக விற்பவரும் வாங்குபவரும் சேர்ந்து, அரசிடம் முறையாக உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை நாடலாம். இப்படி அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்துவதற்கு, உறுதியான, தூய்மையான வெள்ளைத் தாளில் விற்பவரின் பெயர், முழு முகவரி, சொத்தின் உரிமைக்கான வழிகள் உள்ளிட்ட தகவல்களுடன், சொத்தை வாங்குபவரின் பெயர், முழு முகவரி போன்ற விவரங்களுடன், அவற்றிற்கான சட்டப்பூர்வமான சான்றுகளுடன் ஆவணத்தைத் தயார் செய்து, அந்த ஆவணத்தை, அச்சொத்து உள்ள பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அங்கு, அப்பதிவிற்குப் பதிவுக் கட்டணமும், அச் சொத்தின் விற்பனை நடவடிக்கைக்கான வரிகளும் ரூபாய் மதிப்பில் பணமாக/ கேட்பு வரைவோலையாக கட்டப்படவேண்டும். இதில் பதிவுக்கட்டணத்தைத் தவிர்த்து, மற்ற வரிகளைப் பணமாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகவோ கட்டுவதற்குப் பதில் ஆவணப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் உறுதியான தூய்மையான வெள்ளைத் தாள்களுக்குப் பதில் அந்த வரிக்கு இணையான மதிப்புள்ள முத்திரைத் தாள்களைக் கூட வாங்கிக் கொள்ளலாம்.


இந்த ஆவணப்படுத்துதல் மற்றும் பதிவு செய்தலை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்:

வழக்கமாகக் கடையில் சென்று ஒரு பொருளை வாங்குகிறோம். அப்பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும்; அதைச் சொன்னால் போதும்- கடைக்காரர் அதை எடுத்துக் கொடுத்துவிடுவார்- இது ஒரு விதமான வணிக நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் வாங்குபவர் கேட்கும் ஒரு பொருளின் பெயரைச் சொன்னாலே அதைக் கடைக்காரர் எடுத்துக் கொடுத்துவிடுவார். இங்கு ஒரு பெரிய அளவிலான ஒரு தொகை செலவழித்துச் செய்யப்படும் வணிக நடவடிக்கை ஒன்றை எடுத்துக்கொண்டால், அதாவது ஒரு இலகுரக இயக்கூர்தி- மகிழ்வுந்து ஒன்றைச் சுமார் நாற்பது இலட்ச ரூபாய்க்கு ஒருவர் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த வணிக நடவடிக்கையில் வாங்குபவர் பணத்தைக் கொடுக்கிறார்; விற்பவர் அதற்கான 'இரசீதுடன்' பொருளைக் கொடுக்கிறார். வாங்குவது என்பது இத்துடன் முடிந்துவிட்டது. வாங்கும் பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும்; அந்தப் பெயர் ஏற்கனவே வரையறுக்கப்பட்டிருக்கும்; அப்பொருளுக்கு ஒரு அடையாளமும் இருக்கும். அந்தப் பெயரைச் சொன்னால் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அப்பொருளுக்கு ஒரு நிலையான விலையும் இருக்கும். எனவே, விற்பனையாளர் தரும் 'இரசீது' அப்பொருளின் பெயர் மற்றும் அடையாளத்தைத் தாங்கி இருக்கும். அந்த விற்பனையாளர் ஒரு வழக்கமான விற்பனையாளர் என்பதால் அவரின் விற்பனையகத்தில் 'இரசீதுப் புத்தகம்' மற்றும் சட்டப்படியான அனைத்து ஆவணங்களும் இருக்கும்.

அதே நேரம் ஒரு அசையாச் சொத்தை ஒருவர் வாங்கும் போது அச் சொத்திற்கு அனைவருக்கும் தெரியுமளவிற்கு ஒரு வரையறுக்கப்பட்ட பெயர் இருக்காது. வீடு என்றோ, விளை நிலம் என்றோ ஒரு பொதுவான பெயரைக் குறிக்க முடியுமா? அல்லது சொத்தை விற்பவர்கள் வழக்கமான விற்பனையாளர்கள் இல்லை என்பதால் அவர்களிடம் 'இரசீதுப் புத்தகமும்' இருக்காது. எனவே, ஒரு பத்து 'ஏக்கர்' நன்செய் நிலத்தை வாங்கிக் கொண்டு உங்களிடம் பத்து ஏக்கர் நன்செய் நிலத்தை நான் வாங்கியாயிற்று; அதற்காக நான் செலுத்திய தொகைக்கு ஒரு 'இரசீது' போட்டுத் தாருங்கள் என்று என்றும் கேட்க முடியாது. அது இவ்வளவு எளிதான வேலையன்று. அதனால், இது போன்ற சொத்துக்களை விற்றல், மற்றும் வாங்குதலில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணத்தைப் புதிதாகத் தயாரிக்க வேண்டும். அதாவது மகிழ்வுந்து வாங்கும் பொழுது விற்பனையாளர் தரும் 'இரசீது'வைப் போல, இங்கு ஒரு 'இரசீது' கொடுக்க வேண்டும். அந்த 'இரசீது' தான் ஆவணம் ஆகும். இந்த 'இரசீதில்', விற்பவர் மற்றும் வாங்குபவர் குறித்த தகவல்கள்- அதாவது பெயர், முழு முகவரி போன்றன- விற்கப்படும் சொத்தைப் பற்றிய முழு விவரங்கள்- அதாவது சொத்தின் பரப்பளவு, சொத்து இருக்கும் இடம், அச்சொத்தின் உரிமை விற்பவருக்கு எப்படி வந்தது, சொத்தின் தற்காலத்திய விலை மதிப்பு, இவர்கள் விற்கும் விலை உள்ளிட்ட விவரங்கள்- முழுமையாக இருக்க வேண்டும். இவ்விவரங்கள் அனைத்தும் அடங்கிய ஒரு ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். இந்த ஆவணத்தைத் தயாரிக்கத் தெரிந்த விற்பனையாளர் தனக்காகத் தானே ஒரு ஆவணத்தைத் தயாரிக்கலாம். அல்லது அரசிடம் இசைவு பெற்ற ஆவன எழுத்தர் ஒருவரிடம் சென்று ஆவணப்படுத்தலாம். அப்படி ஆவணப்படுத்திய பின், அதை அப்பொழுதே முறையாக அப்பகுதிச் சார் பதிவாலரிடத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பதிவுக்கட்டனமும், முத்திரைத் தாள் கட்டணமும் விதிக்கப்படும். அப்படி விதிக்கப்படும் பதிவுக்கட்டனத்தைப் பணமாக அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்தலாம். முத்திரைத் தாள் கட்டணத்தையும் பணமாக அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்தலாம். இந்த முத்திரைத் தாள் கட்டணத்தை பணமாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகச் செலுத்துவதற்குப் பதிலாக, அக்கட்டனத்தின் அளவு முக மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வாங்கி, விற்பனை ஆவணத்தையே அம்முத்திரைத் தாள்களிலேயே தயாரித்து விடுதல் நடைமுறையில் உள்ளது. அதாவது, முத்திரைத் தாள் கட்டணத்தை முத்திரைத் தாள் வடிவிலும் அல்லது வேறு சில ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவிலும் செலுத்தலாம்.

இந்த ஆவணத்தைப் எழுதிப் பதிவு செய்யும் பொழுது, பதிவாளர் அலுவலகத்தில் 'முத்திரைத் தாள்' வரி என்று சொத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தைக் கட்ட வேண்டும். அந்த வரியை நேரிடையாகக் கட்டுவதற்குப் பதிலாகத் தான், அந்த வரியின் மதிப்பின் அளவிற்குச் சமமான மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வாங்கி அத் தாள்களில் ஆவணத்தைத் தயார் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.



விவசாய நிலங்கள், வீடுகள், காலி இடங்கள், கட்டிடங்கள் போன்ற அசையாச் சொத்தினை வாங்கும் பொழுது, அவற்றின் உரிமையாளர் பெயரை முறைப்படி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பட்டா மாறுதல் என்று பெயர்.

ஒருவர் அல்லது பலர் சேர்ந்து ஒரு அல்லது பல அசையாச் சொத்துக்களை விற்கும் பொழுது, விற்பவ(ர்களும்) ரும், வாங்குபவ(ர்களும்)ரும் சேர்ந்து அதற்காக ஒரு ஆவணம் தயாரித்து அதை முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். அப்படிப் பதிவு செய்த ஆவணத்துடன் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பட்டா மாறுதல் செய்ய வேண்டும். இதற்கெனத் தனியாக விண்ணப்பப் படிவம் உள்ளது. அவ்விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து அல்லது அதே போல கையில் எழுதி ஒரு விண்ணப்பம் தயார் செய்து விண்ணப்பத்துடன் அச்சொத்தின் தற்போதைய உரிமை மாற்றத்திற்கு முந்தைய உரிமை மாற்றத்தின் நாளுக்கு முன்தினம் முதல் இந்த விண்ணப்பம் அளிக்கும் நாள் வரையிலான காலத்திற்கு சொத்து எந்தவித வில்லங்கத்திற்கும் உட்படுத்தப் படவில்லை என 'வில்லங்கச் சான்றிதழ்' ஒன்றையும் சேர்த்து விண்ணப்பிக்கவேண்டும்.

பெண் குழந்தைகள் நலத் திட்டம் தொகு

தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களிலேயே இது ஒரு உன்னதமான திட்டம் எனலாம். ஏனென்றால், இது ஒரு பல்நோக்குத் திட்டமாகும். இத்திட்டத்தின் இலக்குகளாவன:

  • ஏழைக்குடும்பங்கள் மற்றும் பித்தன்கிய குடும்பங்களில் பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகளைக் கொலை செய்தல், பெண் குழந்தைகளை விரும்பாமை உள்ளிட்ட சமூக அவலங்களைக் குறைக்க முயற்சித்தல்.
  • ஏழைக்குடும்பங்களில் குறைந்த பட்சமாக இடைநிலைக் கல்வியான பத்தாம் வகுப்பு வரையாவது பெண் குழந்தைகள் கல்வி கற்றலை, மற்றும் தேர்ச்சி பெறுதலை உறுதி செய்தல்.
  • ஆண் வாரிசு வேண்டும் என்ற அறிவிற்கொவ்வாத மடமையை ஒழிக்க முயற்சி செய்தல்.
  • இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்தல்.

இத்திட்டத்தில் பயன் பெற, இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஆண்டு வருமானம் ரூ.24,000/- அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முதலில், இரண்டு பெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெறவேண்டும். பிறகு, அக்குழந்தைகளின் தாய் அல்லது தந்தை குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான சிகிச்சை மேற்கொண்டதற்கான ஆதாரத்தை முதலில் மருத்துவமனையில் பெறவேண்டும். பின்பு, வட்டாட்சியரிடம் அந்த இரண்டு சான்றிதழ்களையும் இணைத்து, இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளனர்; ஆண் வாரிசு எதுவும் இல்லை எனச் சான்றிதழ் பெறவேண்டும். இவற்றைப் பெற விண்ணப்பிக்கும் பொழுதே வருமானச் சான்றிதழுக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். இச் சான்றிதழ்களைப் பெற்ற பின்னர், இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், ஆண் வாரிசு இல்லை எனச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகிய அனைத்துச் சான்றிதழ்களையும் இணைத்து இரு படிவங்களில் விண்ணப்பிக்க வேண்டும். வருமானச் சான்றிதழை மட்டும் அசலை இணைத்துக் கொடுக்க வேண்டும். மற்ற அனைத்துச் சான்றிதழ்களையும் சான்றொப்பம் பெற்று இரண்டு விண்ணப்பப் படிவங்களுடன் இரு நகல்களில் அளிக்க வேண்டும்.

இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளுக்கும் விண்ணப்பம் அளிக்கப்படவேண்டும். ஒருவேளை, இரண்டாவது குழந்தை பிறக்கையில் இரட்டைக் குழந்தை பிறந்தால், இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாக இருந்தாலும் விண்ணப்பம் அளிக்கலாம். அதாவது இந்நிலையில் மூன்று பெண் குழந்தைகள் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

திருமண உதவித் திட்டங்கள் தொகு

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம்

இது ஏழைக்குடும்பங்களில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம். இத்திட்டத்தில் மணப்பெண்ணின் பெற்றோருக்கு, அவர்கள் மேற்கொள்ளும் திருமணச் செலவுகளை ஈடு செய்யவே உதவித் தொகை வழங்கப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தைக்கோ தாய்க்கோ இந்த உதவி வழங்கப்படுகிறது; மணப்பெண்ணிற்கு எந்த உதவியும் வழங்கப்படாது. இத்திட்டத்தில், மணப்பெண் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் ரூ. 25,000/- பணமாகவும், நான்கு கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது; மணப்பெண் பட்டயப் படிப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ. 50,000/- பணமாகவும், நான்கு கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் உதவி பெற விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

1. மணப்பெண்ணின் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ. 72,000/- அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். 2. திருமணத் தேதியன்று மணப்பெண்ணுக்கு குறைந்தது பதினெட்டு வயது நிரம்பியிருக்க வேண்டும். 3. மணப்பெண் பத்தாம் வகுப்பில் இறுதித் தேர்வுகள் அனைத்தும் எழுதியிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. (பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் ஏதேனும் ஒரு தேர்வுக்குச் செல்ல முடியாமல் இருந்தால் கூட இத்திட்டத்தில் உதவி பெற விண்ணப்பிக்க முடியாது). அல்லது பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதலில் வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து வருமானச் சான்றிதழ் பெற வேண்டும். மாத வருமானம் ரூ. 2000/-ற்கு மேல் இருக்கக்கூடாது. (பார்க்கவும்: வருமானச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் தனியாக வழங்கப்பட்டுள்ளன.)

வருமானச் சான்றிதழ் பெற்ற பிறகு, மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்ட விண்ணப்பத்தைப் பெற்று அதைச் சரியாகப் பூர்த்தி செய்து, ஊராட்சி மன்றத் தலைவர்/ உறுப்பினர், அரசிதழில் பதிவு பெற்ற அலுவலர், உள்ளூரில் பணியாற்றும் அரசு அலுவலர் ஒருவரிடம் சாட்சியம் பெற்று, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலுடன் இரண்டு நகல்களில் விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும். வருமானச் சான்றிதழ் அசலை ஒரு விண்ணப்பத்துடனும், அதன் சான்றொப்பம் பெற்ற நகலை இன்னொரு விண்ணப்பத்துடனும் இணைத்து, திருமணப் அழைப்பிதழையும் ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் இணைத்து, திருமண நாளுக்கு குறைந்தது ஒரு நாளைக்கு முன்னர் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும். திருமண நாளைக்கு முன்னர், அதிக அளவாக தொண்ணூறு நாள்களை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு முன்னரே இவ்விண்ணப்பத்தை அளித்தால், அது ஏற்றுக்கொள்ளப்படாது. அதாவது ஒரு சிலர், நான்கு மாதங்களுக்கு முன்னர் கூடத் திருமணத்தை உறுதி செய்து விடுவர். ஆனால், அப்பொழுதே விண்ணப்பத்தை அளிக்கக் கூடாது. விண்ணப்பத் தேதிக்கும், திருமணத் தேதிக்கும் அதிக அளவில் தொண்ணூறு நாட்களும், குறைந்த அளவில் ஒரு நாளும் இருக்க வேண்டும். திருமணத்திற்கு முந்தைய நாள் விடுமுறை நாள் என்றால், அதற்கு முன்தினமே விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும். திருமண நாளன்றோ, அல்லது திருமணம் முடிந்து ஒரு நாள் கழித்தோ அல்லது திருமணத்திற்குப் பின்னரோ இவ்விண்ணப்பம் அளிக்கப்பட்டால் அது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

  • ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்

இத் திட்டத்தில் பயன்பெற, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறையிலேயே, அத்திட்டத்தில் விண்ணப்பிக்கப் பெறும் சான்றிதழ்களுடன் மணப்பெண்ணின் தாயார் விதவை என்று கூடுதலாக ஒரு சான்றிதழையும் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதியைப் பொருத்த வரை தனித் தேர்வராக இருந்தால் எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், பள்ளியில் பயின்றிருந்தால் எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வுகளை எழுதியவராகவும் இருத்தல் வேண்டும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் வாயிலாக என்ன உதவிகள் அளிக்கப்படுகின்றனவோ அதே அளவிலான உதவிகள் தான் இத்திட்டத்தின் வாயிலாகவும் அளிக்கப்படுகின்றன.

  • அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்

ஆதரவற்ற முதியோர்/ விதவைகள்/ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்/ ஊனமுற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பம் தொகு

ஆதரவற்ற முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு 60 வயது பூர்த்தியைடந்திருக்க வேண்டும். ஆண்டு வருமான ரூபாய் ஐந்தாயிரத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். தமிழகத்தில் இரண்டு விதமான முதியோர் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 1) மத்திய அரசின் முதியோர் நிதி உதவித் திட்ட 2) மாநில அரசின் முதியோர் நிதி உதவிjhghjjhhhத் திட்டம் மத்திய அரசின் நிதியுதவியை பெற வேண்டுமெனில், மனுதாரரின் குடும்பம் வறுமைக் கோட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். (வறுமைக் கோட்டுப் பட்டியலை வெளியிடுவது வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகும். கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி வழங்க வேண்டும்)

  • ஆண்டு வருமான ரூபாய் ஐந்தாயிரத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும்.
  • மக்களின் ஆதரவு ஏதும் இருக்கக்சகூடாது.
  • அசையும் சொத்துகளோ அசையாச் சொத்துகளோ கோருபவருக்கு சொந்தமாக இருக்கக் கூடாது.

குடும்ப அட்டை குறித்த விண்ணப்பங்கள் தொகு

பொதுவாக, குடும்ப அட்டை என்பது பொது மக்கள் தங்களுடைய அவசியத் தேவைக்கான பொருள்களில் சிலவற்றைச் சலுகை விலையில் பெற பயன்படுத்திக் கொள்வதற்கும், அடையாளம் அல்லது முகவரியை உறுதிப்படுத்துவதற்கும் உதவுகிறது. பொருள்களைச் சலுகை விலையிலோ, விலையில்லாமலோ பெறும்பொழுது அரசிற்கு ஏற்படும் இழப்பு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்வதால், குடும்ப அட்டை வழங்குவதில் முறைகேடுகள் ஏற்படக்கூடாது என்பதில் அரசு முழுக்கவனம் எடுக்கிறது. எனவே, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இரு வேறு குடும்ப அட்டைகளில் இருந்தாலோ, ஒரே நபர்/ குடும்பம் இரு வேறு குடும்ப அட்டைகள் வைத்திருந்தாலோ, அரசு இவ்வகையில் வழங்கும் சலுகைகளை, அரசை ஏமாற்றிப் பெறுவதாகவே அரசு விதிகள் பார்க்கின்றன. அதனால், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல் என குடும்ப அட்டை குறித்த அனைத்துப் பணிகளுக்கும் தகுந்த சான்றுகள் அளித்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

குடும்ப அட்டைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவை:

  • 1. வழக்கமாக பொது மக்களுக்கு அளிக்கப்படும் குடும்ப அட்டை.
  • 2. காவலர்களுக்கு வழங்கப்படுவது போன்ற சிறப்புக் குடும்ப அட்டை.

பொது மக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் குடும்ப அட்டைகளைப்பற்றித் தான் விவரமாகச் சொல்லவேண்டியிருக்கிறது.

கிராம நிர்வாக அலுவலர் தொகு

முன்னுரை தொகு

நம் இந்திய திரு நாட்டின் அடிப்படை ஆதாரமாக விளங்குபவை கிராமங்கள். ஏனெனில் கிராமங்களின் கட்டமைப்பில் தான் இந்தியா என்ற நம்முடைய மிகப்பெரிய நாடு உருவாக்கப்படிருக்கிறது. உலக அரங்கில் நமது நாடு தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் , இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களின் வளர்ச்சியினால் மட்டுமே அது சாத்தியமாகும் . இன்று இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைத்து கிராமங்களின் ஒன்றிணைந்த வளர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது . இந்த கிராமங்களின் வளர்ச்சி என்பது இன்றைக்கு தானே நிகழ்ந்து விட முடியாது . எனவே ஒரு கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற , அங்கே ஒரு சிறந்த நிர்வாக கட்டமைப்பு தேவையாக இருக்கிறது . கிராம அளவில் ஒரு சிறந்த நிர்வாகம் அமைகின்ற போது அதன் காரணமாக கிராமங்களின் வளர்ச்சியிலும் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் . எனவே இந்த வளர்ச்சியில் குறிப்பட்டுச் சொல்லும்படியாக இந்த கிராமங்களில் பணிபுரியக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்களின் சிறப்பான செயல்பாடும் அவசியமாகிறது.

கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் தொகு

  1. .கிராம கணக்குகளைப் பராமரித்தல் ,மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல்.
  1. .நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது .
  2. .பல்வேறு சான்றுகள் வழங்குவது தொடர்பாக அறிக்கை அனுப்புதல் .
  3. வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன்கள் பெற . சிட்டா & அடங்கல்களின் நகல் வழங்குவது .
  4. பிறப்பு , இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது , அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது .
  5. தீ ,விபத்து, வெள்ளம் , புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது .
  6. .கொலை ,தற்கொலை , அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல்
  7. .காலரா , பிளேக் & கால்நடை நோய்கள் , தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல் .
  8. .இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல் .
  9. .கிராம ஊழியர்களின் சம்பளபட்டியல் தயாரித்தல் .
  10. .கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல் .
  11. .அரசுக் கட்டிடங்கள் ,மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
  12. .புதையல் பற்றி உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தல் .
  13. .முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளை கவனித்தல் .
  14. .முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரித்தல் .
  15. .பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல் .
  16. .வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல் & ஒத்துழைத்தல் .
  17. .கிராம பணியாளர்களுடைய பணியினைக் கண்காணித்தல் .
  18. .சட்டம் ஒழுங்கு பேணுதல் ,உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல் , குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல் ,சட்டம் ஒழுங்கு பேணுதற்காக கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் .
  19. .தேர்தல் பணிகள் மேற்கொள்வது .
  20. .கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒத்துழைத்தல்
  21. .பொதுச் சுகாதாரம் பராமரித்தல் .
  22. .நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் உயர் அலுவலர்களுக்குத் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுத்தல் .
  23. .சர்வே கற்களைப் பராமரிப்பது , காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது .
  24. .கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்து அறிக்கை அனுப்பதல் .
  25. .வருவாய்த் துறை அலுவலர்களூக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல் .
  26. .குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் , சந்தேகத்திற்கிடமான அன்னியர்கள் வருகையையும் தெரிவித்தல் .
  27. .கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
  28. .அரசு அவ்வப்போது தொடங்கும் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல் .
  29. .மனுநீதி நாள் நிகழ்ச்சி நடத்த வட்டாச்சியருடன் ஒத்துழைத்தல்
  30. .பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல் , ஏரிகளிலும , நீர் வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது அவற்றை முறையாகப் பராமரிப்பது .
  31. .கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து ஒரு பதிவேடு பராமரித்தல் .
  32. .பதிவு மாற்றம் [Transfer Rigistry ]அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பராமரித்தல் .
  33. .நிலப் பதிவேடுகளை கணிணி மயமாக்குதலுக்கான பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது ,
  34. .கிராம அளவில் கடன் பதிவேடு மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்தல்.
  35. .கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்
  36. .பொது இடங்களில் வருடத்திற்கு ஐம்பது பயன் தரும் மரங்களை நடுவது .
  37. .உயர் அலுவலர்கள் கொடுக்கும் பணிகளை மேற்கொள்வது .

ஆனால் மேற்கண்ட பல்வேறு விதமான முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்ள , கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை தவிர , கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வேறு எந்த செலவுத் தொகைகளும் முன் கூட்டியோ , பின்னரோ வழங்கப்படுவதில்லை . அவ்வாறு வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை. இன்று அனைத்து அரசுப்பணிகளையும் விட ஒரு தனித்துவம் பெறுகிற பணியாக கிராம நிர்வாக அலுவலர் பணி அமைந்துள்ளது . காரணம் அனைத்து அரசு பணியாளர்களும் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள அலுவலர்களும் மக்களுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டுள்ளனர் . கல்வித் துறையில் பணிபுரிபவர்கள் மாணவர்களையும் , காவல் துறையில் பணிபுரிபவர்கள் குற்றவாளிகளையும் , மருத்துவத்துறையில் பணிபுரிபவர்கள் நோயாளிகளையும் , போக்குவரத்துத் துறையில் பணிபுரிபவர்கள் பயணிகளையும் , ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிபவர்கள் மக்கள் பிரதிநிதிகளையும் , என ஒரு சிலரை மையப்படுத்தியே பணிபுரிகின்றனர் . இவர்களின் பணியும் கற்பித்தல் , சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு , சுகாதாரம் பேணுதல் , பயணிகள் பரிமாற்றம் , வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல் , போன்ற ஒரு செயலை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது . ஆனால் மேலே கண்ட அனைத்து துறை அலுவலர்களுடனும் , பல்வேறு வகைப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனும் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் . இதனை கூர்ந்து கவனிக்கின்ற போது நமக்கு புரியும் . அது நம் தமிழகத்திற்கே உரிய சிறப்பு

தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட கிராமத்தின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ,பொது சுகாதாரம் பராமரிப்பு , பொதுச் சொத்துகள் பராமரிப்பு , தேர்தல் பணிகள் மேற்கொள்வது , கனிம வளங்களைப் பாதுகாப்பது , இயற்கை வளங்களைப் பாதுகாப்பது இயற்கை இடர்பாடுகளின் போது விரைந்து செயல்பட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவது & அரசின் மக்கள் நலத் திட்ட பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க களப்பணி மேற்கொள்வது போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் , கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . பிறப்பு & இறப்பு சான்றுகள் , அடையாளச் சான்று , அனுபோகச் சான்று , அடங்கல் சான்று , நில உரிமைச் சான்றுகள் வழங்குவது . வருமானச் சான்று சாதிச் சான்று , வாரிசுச் சான்று , இருப்பிட சான்று ,, சொத்து மதிப்புச் சான்று , ஆதரவற்ற குழந்தைச் சான்று , ஆதரவற்ற விதவைச் சான்று , கலப்புத் திருமணச் சான்று , கணவனால் கைவிடப்பட்டவர் சான்று , போன்ற பல்வேறு சான்றுகள் வழங்க பரிந்துரை செய்வது , நில உடமைகளை பராமரித்தல் , மரம் & நில வரிகளை வசூல் செய்தல் , மற்றும் இதர பாக்கிகளை வசூல் செய்தல் , மேலும் ஒவ்வொரு மாதமும் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு , அடங்கல் எழுதி , அது தொடர்பான கணக்குகளை முறையாக எழுதி பராமரிப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் பட்டா மாற்ற விண்ணப்பங்களைப் பெறுவது , உட்பிரிவு மாற்றங்கள் கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது , சிறு விவசாயி சான்று கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது , மேலும் அதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது . சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோரிய விண்ணப்பங்களைப் பெற்று , அதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது என அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது .

கிராம மக்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்குத் துவங்குவது , கூட்டுறவு & மற்ற வங்கிகளில் கடன் பெறுவது , வீடுகள் , கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு பெறுவது , என அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை என்பது அவசியமானதாக கருதப்பட்டு வருகிறது . மேலும் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டாலோ , பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கருதினாலோ உடனடியாக காவல் துறையை அழைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் , கிராமத்தில் சுற்றுப் புறங்களை தூய்மையாக வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளை அழைத்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளவும் , சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளரை அழைத்து பேசி சுகாதார தூய்மை நடவடிக்கை மேற்கொள்ளவும் , கிராம மக்களில் பலருக்கு நோய் பரவி இருந்தாலோ , நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக கருதினாலோ மருத்துவ அலுவலரை அழைத்து பேசி அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளவும் , உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் கிராம நிர்வாக அலுவலர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர் .

காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலரின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதை கிராம நிர்வாக அலுவலரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ,அவர்களுக்குத் தெரிவிக்காமல் கிராமத்தில் உள்ள எந்த ஒரு நபரின் மீதும் காவல் துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ள இயலாது ,கிராமத்தில் கொலை குற்றம் போன்ற மிகப்பெரிய குற்றத்தை செய்த ஒருவர் காவல் துறையில் சரணடைவது தனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதினால் அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண்டையலாம் போன்ற சட்டங்கள் இன்றைக்கும் அமலில் உள்ளதாக தெரிய வருகிறது . ஆனால் அது உறுதியாக தெரியவில்லை . ஒரு வேலை இந்த சட்டம் அமலில் இருந்தால் அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான் . காவல் துறையின் அதிகார அத்து மீறலை தவிர்ப்பதற்கான நடை முறையாக இதனைக் கருதலாம் .ஒரு கால கட்டத்தில் வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் கிராம நிர்வாக அலுவலர் பெற்றிருந்தார் . ஆனால் அது தற்போது நடைமுறையில் இல்லை. ஆனாலும் இன்றைய சூழலில் கிராமங்கள் பல வளர்ச்சியினைக் ண்டிருக்கின்றன , வளர்ச்சிப் பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன , இத்தகைய உன்னதமான பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலரின் தகுதி உயர்த்தப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்டு அவருக்கு கீழ் இரண்டு இளநிலை உதவியாளர்கள் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரின் கீழ் அனைத்து துறை அலுவலர்களும் பணிபுரிவதைப் போல , கிராம அளவில் பணிபுரியக்கூடிய அனைத்து துறை அலுவலர்களையும் கிராம நிர்வாக அலுவலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டிய இந்த கால கட்டத்தில் ஒரு கிராமத்திற்கு ஒரு கிராம நிர்வாக அலுவலர் , ஒரு உதவியாளர் என குறைவான எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர் . மேலும் இரண்டு மூன்று கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய சூழல் இன்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்ப்பட்டிருக்கிறது .

. ஒரு சிலரின் தலையீடு , உயர் அதிகாரிகளின் நெருக்கடி , அளவுக்கு அதிகமான வேலைப்பழு , ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு பல கிராமங்களில் பொறுப்பு , போன்ற பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கிராமங்களையும் நிர்வாகம் செய்யக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் பெயரளவில் மட்டுமே நிர்வாகம் செய்து வருகின்றனர் என்பதே இன்று உள்ள சூழல் . தற்போது உள்ள சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும் எனக் கருதிபணியில் சேர்ந்தாலும் , சூழ்நிலைகள் அவர்களை செயல்படவிடாமல் செய்துவிடுகிறது .காரணம் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளும் , அதிகாரங்களும் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை . கிராம அளவில் ஏற்படக்கூடிய ஒரு சில பிரச்சனைகளின் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் அதிகாரம் வழங்கப்படாமல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்புடுகிறது .எனவே மிக முக்கியத்துவம் வாய்ந்த உன்னதமான பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டால் அது மக்களின் வளர்ச்சியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்துவதாகவே அமைந்துவிடும் . இது ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ஏற்ப்படுத்தப்பட்ட சிறந்த கிராம நிர்வாகக் கட்டமைப்பை நாமே சீர்குலைத்துக் கொண்டோமோ ? என்ற சிந்தனையை உருவாக்கியிருக்கிறது .

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் மேற்கண்ட பல்வேறு விதமான கிராம நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள முன்சீப் , கர்ணம் , என்ற அலுவலர்களும் தலையாரி , வெட்டியான் , நீர்க்கட்டி , என்ற பெயரில் உதவியாளர்களும் அவர்களுக்கு என்றே ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்துள்ளனர் . இதில் நீர்கட்டி என்ற பணியாளர் நீர்நிலைகளை கண்காணிப்பவராகவும் , அதில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றுபவராகவும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உடனுக்குடன் தகவல் தெரிவிப்பவராகவும் இருந்து வந்துள்ளார் . இன்று நீர்கட்டி என்ற பணியாளர் இல்லாமல் போனதனால் இன்று நீர் நிலைகளும் , ஓடைகளும் , ஏரிகளும் காணாமல் போய்விட்டன . நீர் நிலைகளில் பாதி அளவுக்கு அளிக்கப்பட்டு விளை நிலங்களாக மாறிவிட்டன . இதனால் நாட்டின் நீர்வளம் குறைந்து இப்போதே நமக்கு நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது . இதனால் விவசாயம் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது . தலையாரி , வெட்டியான் என்ற உதவியாளர்கள் தகவல் தெரிவிப்பவர்களாகவும் முன்சீப் , கர்ணம் என்ற அலுவலர்களின் பணிகளுக்கு உதவியாகவும் இருந்து வந்துள்ளனர்.

கர்ணம் என்ற அலுவலர்கள் கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் , நிலங்களை தணிக்கை செய்து பயிர் சாகுபடியை அடங்களில் பதிவு செய்தல் , விவசாயப் புள்ளி விவரங்கள் சேகரித்தல் , நில வரி மற்றும் அரசுக் கடன்கள் தொடர்பான கணக்குகளைப் பராமரித்தல் , ஆக்கிரமிப்புகளுக்குத் தகுந்த தீர்வை விதிக்க பரிந்துரை செய்தல் , அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளைக் கண்காணித்து உடனுக்குடன் தகவல் தெரிவித்தல் , சர்வே அடையாளங்களைப் பாதுகாத்தல் , கனிம வளங்களைப் பாதுகாத்தல் , இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர் . இன்று கர்ணம் என்ற பணியாளர் இல்லாமல் போனதனால் நம் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு உள்ளது என்ற உண்மையான புள்ளி விவரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது .மேலும் நாட்டில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்பட்டும் ,இயற்கை வளங்கள் அளிக்கப்பட்டும் , சர்வே அடையாளங்கள் அளிக்கப்பட்டும் , பகுதி அளவாக குறைந்துவிட்டன

முன்சீப் என்ற அலுவலர்கள் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட கிராமத்தின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு [Regulation 11 of 1816 and Regulation 4 of 1821 ] , குற்றங்களைத் தவிர்த்து குற்றங்கள் குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுதல் [ Section 45 ofCRPC ] , ரூ 50 /- க்கு குறைவான மதிப்புள்ள சொத்து வழக்குகளைப் பைசல் செய்தல் [ Act 1 of 1889 ] , பிறப்பு , இறப்புக் கணக்குப் பதிவு செய்தல் [Act 111 of 1899 ] , இருப்புப் பாதைகள் பாதுகாத்தல் , அரசுக் கட்டிடங்களைப் பாதுகாத்தல் , நீர்பாசனப் பணிகள் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் , பொது சுகாதாரம் மற்றும் பொது வினியோகம் , ஆகிய பணிகளையும் நிலவரி மற்றும் அரசுக்கு சேர வேண்டிய இனங்களை வசூல் செய்தல் போன்ற பணிகளையும் , இதர முக்கியத்துவம் வாய்ந்த பணிகளையும் [ Cattle Trespass Act-1 of 1871 and Treasure Trove Act-6 1878 ] மேற்கொண்டு வந்துள்ளனர் . வருவாய் அதிகாரியாக மட்டுமல்லாது கிராமத்தின் பொது நிர்வாகத்தையும் கவனித்து வந்துள்ளனர் .இன்று மேலே கண்ட பல்வேறு வகைப்பட்ட பணிகள் மட்டும் இல்லாமல் பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்களின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது . ஆனால் இந்த பணிகளை மேற்கொள்ள இவர்களுக்கு முறையான கால இடைவெளி கிடைப்பதில்லை .

இன்றைய சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தொகு

பல கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டமைப்பு என்பது சிறப்பாக இல்லை அதன் சுவர் , கதவு ஜன்னல் என அனைத்திலும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது . கழிப்பிட வசதி , மின் வசதி , குடியிருப்பு வசதி இல்லாமல் பாழடைந்து பராமரிக்கப்படாமல் உள்ளது .எனவே இது போனற கிரமங்களில் உள்ள கிராம கணக்குகளைப் பராமரிப்பதில் அந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிரமம் ஏற்ப்பட்டுள்ளது . எனவே அரசாங்கம் இதனை கவனத்தில் கொண்டு இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுப்பது அவசியமகிறது .

கிராம கணக்குகளை புதுப்பித்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருப்பதாலும் ஒரு கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பில் இரண்டு,மூன்று கிராமங்கள் இருந்ததாலும் கிராம கணக்குகள் மோசமான நிலையிலும் , முறையாகப் பராமரிக்கப் படாமலும் மேலும் சர்வே அடையாளங்கள் பகுதி அளவுக்கு மேல் மக்களால் அழிக்கப்பட்டு விட்டன . எனவே Resurvay பணி மேற்கொண்டு கிராம கணக்குகளை மறு கட்டமைப்பு செய்வதும் அவசியமாகிறது . கிராம நிர்வாக அலுவலர்கள் களப்பணி மேற்கொள்பவர்கள் அலுவலகத்தில் அம்ர்ந்த படியே வேலை பார்க்க முடியாது .பணியின் காரணமாக எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் இருந்து நாற்பது , ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் சில நேர்வுகளில் கோட்டாச்சியர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் மாதத்தில் பல நாட்கள் சென்று வருகின்றனர் . ஆனால் இவர்களுக்கான பயணப்படிகள் மிகவும் குறைவக வழங்கப்படுகிறது .

மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் இரண்டு , மூன்று கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்புக்களை வகிக்கின்ற போது அந்த கிராமங்களில் மேற்கொள்கின்ற பணிகளுக்காக எவ்விதமான செலவுத் தொகைகளோ , அதிகப்படியான ஊதியமோ அரசாங்கத்தால் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை .இது போன்ற காரணங்கள் திறமையாகவும் நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்களையும் சற்று தடுமாறச் செய்து விடுகிறது என்பது இன்று உள்ள நிலை .


வருத்திற்கு வருடம் மாறுகின்ற மக்கள் நலத் திட்ட பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க ஒரு குறிப்பிட்டத் தொகையை நிர்வாக அலுவலர்கள் செலவழிக்கின்றனர் .ஆனால் அதற்கான செலவுத் தொகை அவர்களுக்கு முன் கூட்டியே வழங்கப்படுவது இல்லை . அவ்வாறு வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை .இதற்கு நமது அரசாங்கம் கூறாமல் கூறும் பதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருமானம் அதிகமாம் . இது இலஞ்சம் வாங்கி மக்களிடம் கெட்ட பெயரை வாங்கி உங்கள் பணியை மேற்கொள்ளுங்கள் என்று ஊக்குவிப்பது போல் அல்லவா உள்ளது . மேலே கண்ட பல்வேறு வகைப்பட்ட பணிகளின் காரணமாகவும் ,தங்கள் பணிகளைச் செய்ய போதிய கால அவகாசம் கிடைக்காமல் இருப்பதாலும் , ஒரு வேலையை செய்து முடிப்பதற்கு முன்னதாகவே வேறொரு பணிகள் கொடுக்கப்படுவதாலும் கிராம நிர்வாக அலுவலர்களால் எந்த வேலையையும் முழுமையாகவும் , தெளிவாகவும் செய்து முடிக்க இயலாத சூழல் இன்று நிலவி வருகிறது .

நாங்கள் கொடுக்கும் பணிகளைச் செய்து கொடுப்பது மட்டுமே கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை .அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று எங்களுக்குத் தெரியாது ,அதனைப் பற்றிய கவலையும் எங்களுக்கு இல்லை , கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் குறைகளை அரசாங்கத்திடம் கூறி தேவையான வசதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உயர் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர் . ஒரு வட்டார அளவில் செயல்படும் , மாவட்ட அளவில் செயல்படும் திறமையான அலுவலர்களை விட கிராமங்களில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் திறமையான நிர்வாகத்தினால் மட்டுமே அந்த கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற முடியும் . ஒரு மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது அந்த கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கே அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது .

அரசாங்கத்தின் ஒரு சில நடவடிக்கைகள் மூலம் இன்றைய சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் . நமது அரசாங்கம் கிராம நிர்வாக அலுவலர்களின் எதிர்கால முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு என்று தனித் தேர்வினை நடத்தி பணியில் அமர்த்தி வருகிறது . இருந்த போதிலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிக பட்சம் பதவி உயர்வு இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது . கிராம நிர்வாகம் பற்றி அறிந்திராத இளநிலை உதவியாளர்களுக்கு கூட வருவாய் துறையில் உயர் பதவிகள் வழங்கப்படுகிறது . ஆனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை

.வருவாய் துறையின் சார்பாக பல்வேறு வகையான பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் . இருந்த போதிலும் வருவாய் துறையில் உள்ள ஊழியர்களின் மத்தியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் துறையை சார்ந்தவர்கள் அல்ல என அன்னியமாக பார்க்கும் சூழலே இன்று நிலவி வருகிறது . எனவே வருவாய்த் துறை என்பது நிர்வாக அலுவலர்களின் தாய்த் துறை . கிராம நிர்வாக அலுவலர்கள் நிர்வாகத் துறையைச் சார்ந்தவர்கள் . இன்று சட்டம் ,ஒழுங்கு பிரச்சினைகள் தவிர மற்றபடி வருவாய்த் துறைக்கும் மற்ற துறைகளுக்கும் அதிகம் தொடர்பு இருக்கவில்லை ,ஒவ்வொரு துறையும் ஒரு தனித்த அமைப்பாக செயல்ப்ட்டுக் கொண்டிருக்கின்றன . கிராம நிர்வாக அலுவலர்களே மற்ற துறைகளை , வருவாய்த் துறையுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகின்றனர் .

கிராமங்களில் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளும் அரசின் நிகழ்ச்சிகளின் போது அதற்காக ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு பணிகளை மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்த கிராம நிர்வாக அலுவலர்களை உயர் அலுவலர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை . கிராம நிர்வாக அலுவலர்களை வழ்த்திப் பேசி அவர்களை உற்சாகப் படுதுவதற்குக் கூட உயர் அலுவலர்கள் முன் வருவதில்லை . இது போன்ற சமயங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மக்களோடு மக்களாக நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும் நிகழ்வு வேடிக்கையானது . தன்னுடைய பணிக் காலங்களில் வருவாய் ஆய்வாளர் , வட்டாச்சியர் , கோட்டச்சியர் , மாவட்ட ஆட்ச்சியர் என பொறுப்பு வகிக்கின்ற அந்த குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே தாங்கள் பணிபுரிகின்ற இடத்திலேயே தங்கி வேலை பார்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது . ஆனால் அதிக பட்சம் பதவி உயர்வுகளே இல்லாத கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் காலம் வரை தன் சொந்தங்களைப் பிரிந்து அதே கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும் என்ற நிலை ஒரு தனி மனித உரிமை மீறலாகவே தோன்றுகிறது .

கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு மாதத்தில் முப்பது நாட்களும் இரவு பகலாக வேலை பார்த்தாலும் இவர்களின் பணி ஓய்ந்து விடாது . இவர்களுக்கு முறையான விடுமுறை இல்லை என்பதும் ஒரு மிகப் பெரிய குறையாக உள்ளது .அரசின் பல்வேறு துறைகளில் மன உழைச்சல் இல்லாத மென்மையான பணிகளை மேற் கொள்பவர்களுக்கு கூட அதிகப்படியான ஊதியங்கள் வழங்கப்படுகிறது . ஆனால் ஆக்கம் தரும் மிக உன்னதமான மக்கள் நலப் பணியை மேற்கொள்ளும் , உடலாலும் , மனதாலும் சோர்வடைந்திருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவே . தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேர்ந்தாலும் கூட இது போன்ற நிர்வாக அடிப்படையில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதினால் ஒரு சில வருடங்களிலேயே அரசுப் பணித் தேர்வுகளை எழுதி வேறு துறைகளுக்குச் சென்று விடுகின்றனர் .இதனால் கிராம நிர்வாகம் வழுவிழந்து , பொலிவு இழந்து கணப்படுகிறது என்பது இன்று உள்ள நிலை . ,

கிராம கணக்குகளை கணிணி மயமாக்குதல் தொகு

கிராம கணக்குகளை புதுப்பித்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருப்பதாலும் , ஒரு கிரமா நிர்வாக அலுவலர் பல கிராமங்கலுக்கு பொறுப்பு வகித்ததாலும் , அவை மிக மோசமன நிலையிலும் , குழறுபடிகள் நிறைந்தும் காணப்படுகின்றன .அவற்றை முறையாகப் புதுப்பித்து கணிணி மயமாக்குதல் அவசியமாகிறது ,”அ” பதிவேடு , FMP , திருத்தப்பட்ட தூய கிராம சிட்டா , வருடத்திற்கு வருடம் மாறுகின்ற 7 மற்றும் 10 ல் பிரிவு 2 , அடங்கல் , கணக்கு எண் 13 ,14 போன்ற அனைத்து கிராம கணக்குகளும் கணிணி மயமாக்கப்பட வேண்டும் .மேலும் நில வரி மற்றும் இதர வரிகளை இணைய வழியாக செலுத்தி இரசீது பெறும் திட்டம் அறிமுகம் செயப்பட வேண்டும் . நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகின்ற இந்த சூழலில் மக்களின் மிகப்பெரிய சொத்து அவர்களின் நில உடைமைகள்தான் . எனவே இந்த மாறுதல்களையும்,திருத்தங்களையும் ஒரே நாளில் செய்து விட முடியாது .கிரமங்களின் பரப்பளவு ,மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பல மாதங்கள் ,ஒரு சில வருடங்கள் கூட ஆகலாம் .அதனை பரிசீலனை செய்து அதற்கு சரியான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் .

மனுதாரர்கள் ஒவ்வொரு சான்றுகளுக்காகவும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ,வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ,வட்டாச்சியர் அலுவலகம் , என அலைவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சான்றிதழ்களும் இணைய வழியாக வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன்படி தற்போது ஒரு சில மாவட்டங்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது .இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கணிணி மையம் என்ற தனியார் அமைப்பிற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் இந்த மக்கள் கணிணி மையத்திற்கு சென்று பல்வேறு சான்றுகள் வேண்டி இணைய வழியாக விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட நாளுக்கு பிறகு சான்றிதழ்களை மக்கள் கணிணி மையம் வழியாகவே பெற்றுக்கொள்ள முடியும் .

ஆனால் இந்த சேவையில் ஒரு சில குறைபாடுகளையும் காண முடிகிறது .பொதுமக்கள் மக்கள் கணிணி மையம் வழியாக பல்வேறு சான்றுகள் வேண்டி விண்ணப்பம் செய்து கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர் ,வட்டாச்சியர் என யாரையும் சந்திக்காமலே சான்றிதழ் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது .பொதுமக்கள் விண்ணப்பம் செய்வதோடு தனது வேலை முடிந்தது என்றென்னி கிராம நிர்வாக அலுவலரின் , வருவாய் ஆய்வாளரின் , வட்டாச்சியரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தனது வேலையை பார்க்க சென்று விடுகின்றனர் .

குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதாலும் , உயர் அலுவலர்கள் நெருக்கடி கொடுப்பதாலும் , விசாரணை மேற்கொள்ளாமல் சான்றிதழ் வழங்கும் சூழல் உருவாகியிருக்கிறது . மக்கள் கணிணி மையம் தனியார் அமைப்பாக இருப்பதாலும் , தகவல் தொழில் நுட்பங்கள் பெருகி வருவதாலும் , எந்த ஒரு தகவலையும் தவறாக காட்டும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது . தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் அவற்றிற்கு இல்லை . கிராம நிர்வாக அலுவலரைக் கூடச் சந்திக்காமல் சான்றிதழ் பெறுவது பல தவறுகளுக்கு வழி வகுக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும் . எனவே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இவ்வசதிகளை வழங்குவதே சரியானதாக இருக்க முடியும் . மேலும் ஒவ்வொரு சான்றுகளுக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுது . கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு இவ்வசதிகளை வழங்குகின்ற போது பெயரளவில் உள்ள வருவாய்த் துறையினால் அரசின் வருவாயும் அதிகரிக்கும் .பல்வேறு சான்றுகளை கட்டணமின்றி மக்களுக்கு வழங்குகின்ற போது , மேற்கண்ட சான்றுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கில் பொதுமக்கள் அதன் முக்கித்துவத்தை அறியாமல் அலட்சியம் செய்கின்றனர் . எனவே மேற்கண்ட உத்திரவுகள் ,சான்றுகளுக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிப்பது சிறப்பு .

தகவல் தொழில் நுட்ப வசதிகளை வழங்குதல் தொகு

கிராமங்களில் நடைபெறக்கூடிய சமூக விரோதச் செயல்களைக் கண்காணிக்க ,சட்டத்திற்கு புறம்பான செயல்களைக் கண்காணிக்க , என கிராமங்களின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனைக் கண்காணிக்கும் மைய்யமாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மாற வேண்டும் . மேலும் அவ்வப்போது தொடங்கும் அரசின் நலத் திட்டங்களை அறிவிக்கவும் , மக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவது குறித்தான விழிப்புணர்வு பெறவும் , சமுதாய விழிப்புணர்வு பெறவும் ,கிராமங்களில் நடைபெறக் கூடிய வள்ர்ச்சித் திட்ட பணிகள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஒவ்வொரு தெருவிற்கும் ஒலிப்பெருக்கி வசதிகள் வழங்கப்பட வேண்டும் .

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் விரிவாக்கம் தொகு

நம் நாடு வேளாண்மையைச் சார்ந்த நாடு , நம் நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கிய பங்கினை வகித்து வருகிறது . கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்குகின்ற புள்ளி விவர அறிக்கையின் அடிப்படையில் தான் நாட்டின் விவசாய பொருளாதார புள்ளி விவர அறிக்கை தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . மாதா மாதம் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு அடங்கள் எழுதுவது கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளில் ஒன்றாக இருக்கிறது . ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் எந்த நாட்களில் அல்லது தேதிகளில் பயிர் ஆய்வு பணி மேற்கொள்ள வேண்டும் , எத்தனை நாட்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாக வரையறை செய்யப்படவில்லை .இந்த பணியினை மேற்கொள்வதற்கான கால அளவு கிராமங்களுக்கு கிராமம் பரப்பளவின் அடிப்படையில் வேறுபடும் .ஒவ்வொரு கிராமமும் சராசரியாக மூன்றாயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக இருக்கிறது .ஆக்கிரமிப்புகளை கண்காணித்தல் , சர்வே கற்களை கண்காணித்தல் , அரசு நிலங்களில் மரங்கள் வெட்டப்படுகின்றனவா ? , சட்டத்திற்கு விரோதமாக கனிம வளங்கள் பயன்படுத்தப்படுகிறதா  ? போன்றவைகளை கண்காணித்தல் , போன்ற பணிகளுடன் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு அடங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு காலை முதல் மதியம் வரை நூறு ஏக்கர் பரப்பளவை பயிர் ஆய்வு செய்யலாம் என வைத்துக்கொள்வோம் .

மதியத்திற்கு மேல் மக்களிடம் நிலவரி & மரவரிகளையும் , இதர பாக்கிகளையும் வசூல் செய்வது , அதற்கான கணக்குகளை முறையாக எழுதி பராமரிப்பது , நில உரிமை மாற்றத்திற்காக நில அளவை பணி மேற்கொள்வது , பட்டா மாற்றம் , உட்பிரிவு மாற்றம் போன்ற நில உரிமை மாற்றத்திற்கான விண்ணப்பங்களைப் பெற்று , பரிசீலனை செய்து , அதனை உரிய அலுவலருக்குப் பரிந்துரை செய்வது , அது தொடர்பான கணக்குகளில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்வது , அது தொடர்பான பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பது நில உரிமைச் சான்று , அனுபோகச் சான்று , அடங்கல் சான்றுகள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளவும் மக்களின் நலனுக்காக அரசு நிலங்களோ ,பட்டா நிலங்களோ அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படும் போதோ , அல்லது நில ஒப்படை செய்யும்போதோ அதற்கான அறிக்கை தயாரிப்பது போன்ற பணிகளையும் நில அளவைத் துறையின் சார்பாக , நில அளவை பயிற்சி பெற்ற , ஒரு முழு நேர அரசு பணியாளர் பணிபுரிந்தால் மட்டுமே சரியாகவும் தெளிவாகவும் செய்ய முடியும் .

மேற்கண்ட நிலை உருவாகின்ற போதுதான் நம்நாட்டின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்ற உண்மையான புள்ளி விவரத்தை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் . முடிந்த அளவிற்காவது நம் நாட்டின். இயற்கை வளங்களையும் , கனிம வளங்களையும் ,பாதுகாத்துக் கொள்ள முடியும் . கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்போது உள்ள பல்வேறு வகையான பணிச் சுமைகளின் காரணமாக மேற்கண்ட பணிகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர் . மக்களிடம் வசூல் செய்ய வேண்டிய நிலவரி & மரவரிகளை வசூல் செய்ய இயலாமல் ஜமாபந்தி நாட்களில் தாங்களே செலுத்தி கணக்கை முடிக்கும் கட்டாயத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தள்ளப்பட்டிருக்கிறனர்.


கிராமத்தின் பிறப்பு , இறப்பு பதிவாளராகவும் & சான்றுகள் வழங்குபவராகாவும் , வருமானச் சான்று , சாதிச் சான்று , இருப்பிடச் சான்று , வாரிசுச் சான்றுகள் , வேண்டி வரப் பெற்ற விண்ணப்பங்கள் ,சொத்துமதிப்புச் சான்று ,சிறுவிவசாயி சான்று , ஆதரவற்ற குழந்தைச் சான்று , ஆதரவற்ற விதவைச் சான்று , கணவனால் கைவிடப்பட்டவர் சான்று ,கலப்புத் திருமணச் சான்று ,பள்ளிச் சான்றுகள் தொலைந்ததற்காக வழங்கப்படும் சான்று , போன்ற மேலும் பல்வேறு வகையானச் சான்றுகள் வழங்க விசாரணை மேற்கொண்டு அதனை வட்டாச்சியருக்குப் பரிந்துரை செய்வது .சமுக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு வட்டாச்சியருக்குப் பரிந்துரை செய்வது போன்ற பணிகளையும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர் . கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை இல்லாமல் மேற்கண்ட பல்வேறு வகையான சான்றுகள் & உதவிகளை வட்டாச்சியரால் வழங்கஇயலாது என்பது குறிப்பிடத்தக்கது .

வருத்திற்கு வருடம் புதிது புதிதாக மாறுன்கிற மக்கள் நலத் திட்டங்களான உழவர் பாதுகாப்புத் திட்டம் , மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் , வண்ணத் தொலைக்காட்சிபெட்டி வழங்கும் திட்டம் , மின் விசிறி , மிக்சி , கிரைண்டர் வழங்கும் திட்டம் , அம்மா திட்டம் , ஆதார் திட்டம் ,விரைவு பட்டாமாற்ற திட்டம் , போன்ற பல முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு களப்பணி மேற்கொள்வது அதற்கு செயல் வடிவம் கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர் .ஆனால் மேலே கண்ட பல்வேறு வகையான முக்கியத்துவம் வாய்ந்த சான்றுகள் , உதவித் தொகைகள் , மக்கள் நலத் திட்டப் பணிகள் , போன்ற பல்வேறு வகையான பணிகளையும் வருவாய் துறையின் சார்பாக கணிணி அறிவு நிறைந்த , ஒரு முழுநேர அரசுப்பணியாளர் மேற்கொண்டு செய்தால் மட்டுமே சரியாகவும் , தெளிவாகவும் குளறுபடிகள் இல்லாமலும் பார்த்துக் கொள்ள முடியும் .


கிராம நிர்வாக அலுவலரின் தகுதியை உயர்த்துதல் தொகு

கிராமங்களில் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிக பட்சம் பதவி உயர்வு இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது . எனவே கிராம நிர்வாக அலுவலர்களின் திறனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நிர்வாக அலுவலர்கள் அனைவரையும் group 2 என்னும் நிலையில் தரம் உயர்த்துதல் வேண்டும் . இனி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளவர்கள் பட்டப்படிப்பு முடிதவர்கள் [grup 2 ]என்ற நிலையில் தேர்வு செய்யப்பட வழிவகை செய்யப்பட வேண்டும் .

அவர்களுக்கான தேர்வு முறையிலும் சில மாறுதல்களைச் செய்யலாம் .இதன் மூலம் தகுதியானவர்கள் மட்டுமே நிர்வாக அலுவலர்களாக தேர்வு செய்யப்படுவது மேலும் உறுதியாகும் .மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய வழிவகை செய்யப்பட வேண்டும் . அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட நிர்வாகத் துறையின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் வேறு துறைகளுக்கு மாறுதல் வழங்கி அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் .

இதில் ஏற்படக் கூடிய பிரச்சினை என்னவென்றால் பத்தாம் வகுப்பு தரத்தில் உள்ளவர்கள் எங்கள் வேலை வாய்ப்பு பறிபோகும் என்று போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது . ஆனால் பத்தாம் வகுப்பு தரத்திலான கூடுதல் பணியிடங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதால் , மிகச் சிறந்த நிர்வாகத்தை எதிர் பார்க்கும் அனைவரும் இதனை வரவேற்ப்பார்கள் . நமது அரசாங்கம் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காக பல்லாயிர கணக்கான காவல் பணிகளை உருவாக்கி உள்ளது . மிகச் சிறந்த அறிவாளிகளாக மாணவர்களை உருவாக்க இலட்சக் கணக்கில் ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி , பணியமர்த்தி வருகிறது. இந்த குடிமக்களை வழி நடத்த , மிகச் சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க கூடுதல் பணியாளர்களை நியமிப்பது குறித்து நமது அரசு ஆலோசனை செய்ய வேண்டும் .

இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்கி பணிபுரியும் நேரத்தை விட வட்டாச்சியர் அலுவலகத்திற்குத் தான் அதிகம் செல்ல வேண்டி இருக்கிறது . எனவே அதிக பட்ச்சம் இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்கி பணிபுரியும் சூழல் உருவாக வேண்டும் .

கிராமம் , ஒன்றியம் , வட்டார அளவில் " நிர்வாகத் துறை "யை ஏற்படுத்துதல் தொகு

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒன்றிய , வட்டார , மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் பதவி உயர்வுகள் வழங்குதல் தொகு

மேலும் சில வரிகள் தொகு

திருமண உதவி திட்டத்தில் திருமணத்திற்கும் விண்ப்பிக்கும் நாளுக்கும் இடையே நாற்பது நாள் இருக்க வேண்டும். மேலும் மணமகன் வயது சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ்(TC) இணைக்க வேண்டும்.

  1. தடித்த எழுத்துக்கள்